பெற்ற தாயிக்கு ட்ரம்மில் சமாதிகட்டிய மகன்.. அதிர்ச்சியடைந்த போலீசார் தீவிர விசாரணை...!



son-who-buried-his-mother-in-drum-with-cement

சென்னை நீலாங்கரை பகுதியை சேர்ந்த 86 வயதான செண்பகத்திற்கு பாபு  மற்றும் சுரேஷ் என இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பாபு தனது குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார்.  இளைய மகள் சுரேஷிற்கு கெல்சி  என்ற மனைவியும் சைமன், சாரா என இரு பிள்ளைகளும் உள்ளனர்.

செண்பகம் தனது இளைய மகன் சுரேஷ் வீட்டில் வசித்து வந்துள்ளார். சுரேஷ் தனது மனைவி பிள்ளைகளுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததால் அவரது மனைவி கெல்சி  தனது பிள்ளைகளுடன் பெருங்குடியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு கடந்த 8 ஆம் தேதி சென்று விட்டார்.

இதனையடுத்து செண்பகமும், சுரேஷும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளனர்.  மூத்த மகன் பாபு தனது தாயை பார்க்க சுரேஷ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவரான சுரேஷ் அண்ணன் பாபுவை வீட்டில் நுழைய விடாமல் தடுத்து தகராறு செய்ததுடன், தாய் குறித்து கேட்டதற்கு மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த பாபு தனது தாய் குறித்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோது அவர்கள் கடந்த சில நாட்களாக செண்பகத்தை பார்க்கவில்லை என்றும், இது பற்றி சுரேஷிடம் கேட்டதற்கு முறையான பதில் அளிக்கவில்லை என்றும் தெரிவித்தனர். உடனே பாபு நீலாங்கரை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தனது தாய் செண்பகம் சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டதாகவும், அவரை வீட்டில் இருந்த டிரம்மில் போட்டு சிமெண்டால் பூசி அடக்கம் செய்துவிட்டதாகவும் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், டிரம்மில் உள்ள மூதாட்டி செண்பகம் உடலை எடுக்க முயன்றனர். ஆனால் உடலை எடுக்க முடியாத காரணத்தால் ட்ரம்முடன் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுரேஷிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.