மருத்துவமனையின் அலட்சியம்..! 12 வருடமாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.!

மருத்துவமனையின் அலட்சியம்..! 12 வருடமாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.!


Scissors in the woman's stomach

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியை சார்ந்தவர் பாலாஜி. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் பாலாஜியின் மனைவி குபேந்திரி, கடந்த 2008 ஆம் ஆண்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலமாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

இதனையடுத்து, பிரசவத்திற்கு பின்னர் குபேந்திரிக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 18 ஆம் தேதி கடுமையான வயிற்று வலி ஏற்படவே, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

குபேந்திரியின் வயிற்றை ஸ்கேன் செய்ததில் அவரது வயிற்றில் கத்திரிக்கோல் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், பிரச்சனையை சமாளிக்கும் வகையில் ஸ்கேன் செய்த அறிக்கையை குடும்பத்தினரிடம் கொடுக்க மறுப்பு தெரிவித்த நிலையில், பாலாஜிக்கு இந்த விஷயம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, பாலாஜி தனது மனைவியை சென்னை அரசு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

 அங்கு ஸ்கேன் செய்த மருத்துவர்கள், குபேந்திரியின் வயிற்றில் கத்தரிக்கோல் இருப்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், கவனக்குறைவாக அறுவை சிகிச்சை செய்து மனைவியின் வயிற்றில் கத்தரிக்கோலை வைத்து தைத்த திருத்தணி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் உண்மையை மறைக்க முயன்ற திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து பெண்ணின் உடலில் இருந்த கத்தரிக்கோல் வெளியே எடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.