தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கவிருக்கும் கனமழை!. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கவிருக்கும் கனமழை!. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதையடுத்து தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் கேரளாவில் இன்று 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும் என திருவனந்தபுரம் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இப்பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.