அ.ம.மு.க நிர்வாகியை தாக்கியதாக புகார்!!.. எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு..!!

அ.ம.மு.க நிர்வாகியை தாக்கியதாக புகார்!!.. எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு..!!



Police have registered a case against ADMK Interim General Secretary and Leader of Opposition Edappadi Palaniswami.

அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

சிவகங்கை மாவட்டம், அவனியாபுரம் பகுதியில்  நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, நேற்று  மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர்  விமான நிலையத்திலிருந்து ஏர்லைன் பேருந்தில் ஏறி விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தார். 

அந்த பேருந்தில் எடப்பாடி பழனிசாமி உடன் பயணித்த சிங்கம்புணரி பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரன்  என்பவர்  துரோகத்தின் அடையாளம் என எடப்பாடி பழனிசாமியை நோக்கி கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. ராஜேஸ்வரன் தனது முகநூல் பக்கத்தில் லைவ் வீடியோவாக இதனை பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் ராஜேஸ்வரன் கையில் இருந்த செல்போனை பிடுங்கியுள்ளார். எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வந்திருந்த அ.தி.மு.கவினர்  விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த ராஜேஷ்வரனை தாக்கினர். இந்த சம்பவம் குறித்து ராஜேஸ்வரன் அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சம்பவம் குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் ராஜேஸ்வரன் அ.ம.மு.க நிர்வாகி என்பது தெரியவந்தது. பின்னர் மதுரை விமான நிலையத்தில் அமமுக நிர்வாகி ராஜேஷ்வரன் தாக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் அவனியாபுரம் காவல்துறையினர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்தனர். சமூக வலைதளத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சனம் செய்து வீடியோ பரப்பியதாக  ராஜேஸ்வரன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.