நீர் தேக்கத்தில் மிதந்த புதுமண தம்பதியினர்..!! திருமணமாகி 4 நாட்களில் நிகழ்ந்த சோகம்..!!



On the 4th day after their wedding, a newlywed couple found their bodies floating in a water reservoir, causing tragedy near Thoothukudi.

திருமணம் முடிந்த 4 வது நாளில் புதுமண தம்பதியினர் நீர் தேக்கத்தில் சடலமாக மிதந்த சம்பவம் தூத்துக்குடி அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள மேல ஆத்தூர் சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிகுமார் (30). இவர் கேரள மாநிலத்தில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். தூத்துக்குடி அருகேயுள்ள முள்ளக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராமய்யா. இவரது  மகள் முத்துமாரி (21).

கடந்த 10 ஆம் தேதி பழனிகுமாருக்கும், முத்துமாரிக்கும் பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் சுப்பிரமணியபுரத்தில் புதுமண தம்பதியின வசித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று பழனிகுமார்-முத்துமாரி தம்பதி வீட்டின் அருகில் உள்ள தோட்டத்துக்கு சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த  குடும்பத்தினர் அவர்கள் இருவரையும் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்த நிலையில், மேல ஆத்தூர் பகுதியில் கூட்டு குடிநீர் திட்டத்துக்காக அமைக்கப்பட்டு இருந்த நீர்த்தேக்கத்தில் புதுமண தம்பதியினர் பிணமாக மிதந்தனர். இதனைகண்டு அ அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தோர், ஆத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தம்பதியினரின் சடலங்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து நீர் தேக்கத்திற்கு ஓடிவந்த பழனிகுமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.