திருமணமான 6 மாதத்தில் அரசு மருத்துவமனை செவிலியர் தற்கொலை… விசாரணையில் கோட்டாட்சியர்.. திருவாரூரில் பதற்றம்!....

திருமணமான 6 மாதத்தில் அரசு மருத்துவமனை செவிலியர் தற்கொலை… விசாரணையில் கோட்டாட்சியர்.. திருவாரூரில் பதற்றம்!....



nurse who is working in government hospital commit suicide

திருமணமான ஆறே மாதத்தில் அரசு பொது மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்த இளம்பெண் தூக்கிவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பேரளம் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த கிருத்திகா என்பவருக்கு, திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள பண்டாரவடை திருமளம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்த கிருத்திகா, பேரளம் பகுதிக்கு வேலை மாற்றம் பெற்றுக்கொண்டார். திருமணமாகி ஆறு மாதங்கள் ஆன நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே மன கசப்பு ஏற்பட்டு அடிக்கடி பிரச்சனை நடந்ததாக கூறப்படுகிறது.

இதனால், மன உளைச்சலுக்கு உள்ளான கிருத்திகா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர், அவரை திருவாரூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் போகும் வழியிலேயே கிருத்திகா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடந்த சில வாரங்களில் கணவன் மனைவியிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கிருத்திகாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி, அவரது பெற்றோர் பேரளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், பேரளம் காவல்துறை கிருத்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமான ஆறே மாதத்தில் கிருத்திகா தற்கொலை செய்து கொண்டதால், இந்த சம்பவம் குறித்து திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.