பிரபல ரவுடி வெட்டிக் கொலை: அதிகாலையில் பரபரப்படைந்த நெய்வேலி டவுன்ஷிப்..!

பிரபல ரவுடி வெட்டிக் கொலை: அதிகாலையில் பரபரப்படைந்த நெய்வேலி டவுன்ஷிப்..!



Neyveli township in a frenzy early in the morning due to rowdy's murder

கடலூர் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப், வட்டம் 30ல் உள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரமணி ( 43). இவரது மனைவி செல்வி. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரபல ரவுடியான இவர் மீது நெய்வேலி டவுன்ஷிப்பில் உள்ள தெர்மல் காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு வீரமணியின் மனைவி மற்றும் குழந்தைகள் தங்களது சொந்த ஊருக்கு சென்று விட்டனர். வீரமணி மட்டும் இரவு வீட்டில் தூங்கியுள்ளார். இன்று அதிகாலை நேரத்தில் மர்மநபர்கள் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் வீரமணியை சரமாரியாக வெட்டினர்.

இந்த தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இன்று காலை வீட்டில் இருந்து ரத்தம் வெளியே வழிந்துள்ளது. இதன் காரணமாக சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தோர், அவரது வீட்டில் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது  வீரமணி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து இந்த கொலை சம்பவம் குறித்து, நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், வீரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெய்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், வீரமணியை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக இந்த கொலை சம்பவம் நடந்தது? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.