110 அடி ஆழ கிணற்றில் குதித்த காதல் மனைவி.! அடுத்த நொடியே குதித்த கணவன்.! அடுத்து நடந்த ஆச்சர்யம்.!

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே வசித்து வருபவர் முத்துமாரி. இவரது கணவர் இறந்த நிலையில் ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். முத்துமாரியின் மகன் துர்கேஸ்வரன் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்தநிலையில், துர்கேஸ்வரனும் மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியைச் சேர்ந்த ஜஸ்வர்யா என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்ததால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் வீட்டைவிட்டு வெளியேறிய ஐஸ்வர்யா, துர்கேஸ்வரனை திருமணம் செய்து கொண்டு அவர் வீட்டிலே கடந்த ஒரு வாரமாக வசித்து வருகிறார். இந்நிலையில், ஐஸ்வர்யாவின் மாமா ஒருவர் துர்கேஸ்வரன் வீட்டிற்கு வந்து தன்னுடன் வீட்டிற்கு வருமாறு கூறி ஐஸ்வர்யாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த ஜஸ்வர்யா வீட்டிற்கு வெளியே இருந்த 110 அடி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனைப் பார்த்த துர்கேஸ்வரனும் செய்வதறியாமல் கிணற்றில் குதித்தார். ஆனால் கிணற்றில் தரையில் இருந்து 4 அடி மட்டுமே தண்ணீர் இருந்ததால் இருவரும் காயங்களுடன் உயிருக்கு போராடினர். இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.