வெளியாகிறது புதிய அரசாணை; தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் கடும் தண்டனை
வெளியாகிறது புதிய அரசாணை; தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் கடும் தண்டனை
சுற்றுச்சூழல் மற்றும் மண் வளத்தை சீர்குலைக்கும் பிளாஸ்டிக் பொருட்களை வரும் ஜனவரி 1ம் தேதி முதல் தடை செய்வதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இதனால் கடைகளில் விற்பனை செய்யும் பொருட்களை எடுத்து செல்ல பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மாற்று பொருட்களை பாளை பயன்படுத்த துவங்கி விட்டனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், உணவகங்களில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் தாள்களுக்கு பதிலாக பழைய முறைப்படி வாழை இலையை பயன்படுத்த பல உணவகங்கள் துவங்கிவிட்டன. குறிப்பாக சென்னையில் பாணி பூரி, காளான் விற்பனை செய்யும் சில சிறிய வகை கடைகளில் கூட வாழை இலைகள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.
இந்நிலையில், வரும் ஜனவரி 1 முதல் தமிழக அரசின் உத்தரவை மீறி, பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கான அரசாணை விரைவில் வெளியாக இருப்பதாக, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் வெளிமாநிலங்களில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு வந்தால், வாகனத்தை பறிமுதல் செய்ய கூடிய அளவிற்கு அரசாணை வெளியிடப்பட உள்ளது என்றும் கூறினார். எனவே பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவதை மக்கள் முற்றிலும் தவிர்த்துவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.