2 மகள்கள், மனைவி கொலை.. தந்தை தற்கொலை.. நாகையில் நடந்த பதறவைக்கும் சம்பவம்.!

2 மகள்கள், மனைவி கொலை.. தந்தை தற்கொலை.. நாகையில் நடந்த பதறவைக்கும் சம்பவம்.!


Nagapattinam Kilvelur Puducherry Village Father Kills Wife and 2 Daughters he Also Died Suicide

மூத்த மகள் காதல் திருமணம் செய்ததால் மன விரக்தியில் இருந்த தந்தை, தனது மகள்கள் மற்றும் மனைவியின் தலையில் ஆட்டுக்கல் போட்டு கொலை செய்து, தானும் தற்கொலை செய்துகொண்டார். 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர், புதுச்சேரி கிராமத்தில் வசித்து வருபவர் லட்சுமணன் (வயது 55). இவர் வீட்டிலேயே தேநீர் மற்றும் உணவக கடை நடத்தி வந்துள்ளார். இவரின் மனைவி புவனேஸ்வரி (வயது 45). இந்த தம்பதிகளுக்கு தனலட்சுமி (வயது 21), வினோதினி (வயது 18), அட்சயா (வயது 15) என்ற 3 மகள்கள் இருந்துள்ளனர். 

லட்சுமணன் - புவனேஸ்வரி தம்பதிகளின் மூத்த மகளான தனலட்சுமி பெற்றோரின் எதிர்ப்பை மீறி, கடந்த 7 மாதங்களுக்கு முன்னதாக விமல்ராஜ் என்பவரை திருமணம் செய்து, இதே கிராமத்தில் கணவருடன் வசித்து வருகிறார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் கடந்த 7 மாதமாக சோகத்தில் தவித்து வந்த லட்சுமணன், கடந்த 4 நாட்களாக கடையையும் திறக்கவில்லை. மேலும், அவரின் வீட்டிலும் ஆட்கள் நடமாட்டம் இல்லை.

Nagapattinam

இதனால் சந்தேகமடைந்த உள்ளூர் மக்கள் கீழ்வேளூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது குடும்பத்தினர் 4 பேர் பிணமாக இருந்துள்ளனர். லட்சுமணன் தூக்கில் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில், லட்சுமணன் மனைவி, 2 மகள்களின் தலையில் ஆட்டுக்கல்லைப்போட்டு கொலை செய்து, தானும் தற்கொலை செய்துகொண்டது அம்பலமானது.