குப்பை மேடாக இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம்.! ரூ.20 கோடி செலவில் சுற்றுச்சூழல் பூங்கா.! திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்.!

குப்பை மேடாக இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம்.! ரூ.20 கோடி செலவில் சுற்றுச்சூழல் பூங்கா.! திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்.!



MK Stalin opening park in pallikaranai

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ரூ.20 கோடி செலவில் 2.5 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் கடந்த 1960 ஆம் ஆண்டு 6 ஆயிரம் எக்டர் பரப்பளவில் இருந்தது. அதன் பிறகு நகரமயமாதல் காரணமாகவும், தொழில் மையம், கல்வி நிறுவனங்கள் மென்பொருள் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு காரணமாக தற்போது பரப்பளவு வெகுவாக சுருங்கியுள்ளது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மட்டுமே நகரத்தின் எஞ்சியிருக்கும் ஈரநில சுற்றுச்சூழல் (wetland ecosystem) அமைப்பாகும், மேலும் இது தென்னிந்தியாவில் எஞ்சியிருக்கும் சில மற்றும் கடைசி இயற்கை ஈரநிலங்களில் ஒன்றாகும். இந்த சதுப்புநிலம் பல்வேறு இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த பறவைகளுக்கு இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் செயல்படுகிறது.

இந்த சதுப்பு நிலப் பகுதியில்  176 வகையான பறவை இனங்கள், 10 வகையான பாலூட்டிகள், 21 வகையான ஊர்வன இனங்கள், 10 வகையான நிலநீர் வாழ்வினங்கள், 50 வகையான மீன் இனங்கள், 9 வகையான நத்தை இனங்கள், 5 வகையான ஒட்டு மீன் இனங்கள், 14 வகையான வண்ணத்து பூச்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை பாதுகாக்கும் வகையில் 42 வகையான தாவர வகைகள் மற்றும் புல்வெளிகள் அமைவதோடு, நெடுஞ்சாலை சதுப்பு நிலத்தின் எல்லையில் தடுப்பு சுவர் அமைத்து, சதுப்புநிலம் பாதுகாக்கப்படுகிறது. மேலும் இது சதுப்பு நிலம் என்பதை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பெயர்ப்பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியின் குப்பை மேடாக இருந்த பகுதி முழுமையாக சீரமைக்கப்பட்டு சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றப்பட்டு இன்று மக்களின் பயன்பாட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.