என்னமா யோசிக்கிறாங்க..! "சரக்கு குழு" வாட்ஸ்-அப் குழுவில் அனல்பறக்கும் மது விற்பனை.!

என்னமா யோசிக்கிறாங்க..! "சரக்கு குழு" வாட்ஸ்-அப் குழுவில் அனல்பறக்கும் மது விற்பனை.!


liquor sale in whatsapp group

கொரோனா தொற்றின் 2வது அலை தற்போது நாடு முழுவதும் தீவிர பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில் அரசு டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக்கொண்டு தற்போது கள்ளச்சந்தையில் பல இடங்களில் மது விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், சாராய விற்பனை அதிகரித்திருப்பதுடன், வெளி மாநிலங்களில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து தமிழகத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வதும் அதிகரித்துள்ளது. இந்தநிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் வெளி மாநிலத்தில் இருந்து கடத்தி வந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

liquor sale

இந்தநிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் "சரக்கு குழு" என்ற பெயரில் வாட்ஸ்-அப் குழு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் செயல்பட்டு வந்துள்ளனர். மேலும் இந்த குழுவுடன் தொடர்புள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வாட்ஸ்-அப் குழு மூலம் மது மற்றும் சாராயம் விற்பனை நடந்து வந்துள்ளது. 

மதுபானம் வாங்க விரும்புவோர் அவர்களுடைய வாய்ஸ் மூலம் அந்த குழுவில் பதிவு செய்து அவர்களிடம் உள்ள மதுபான பாட்டில்கள் விவரம் மற்றும் விலையை உடனடியாக வாய்ஸ் மூலம் பதிவு செய்வார்கள். பின்னர் குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து மது பாட்டில்களை பெற்றுக் கொள்ளலாம் என குரூப் அட்மின் தெரிவிப்பார். இதுதொடர்பாக தகவல் கிடைத்த போலீசார் அந்த வாட்ஸ்-அப் குழுவின் அட்மின்களான வாணியம்பாடி பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் மற்றும் சரவணன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.