கடனை செலுத்தத்தவறிய பெண்ணை கடத்திச்சென்று பாலியல் தொல்லை; நிதிநிறுவன ஊழியர்கள் அட்டகாசம்..!

கடனை செலுத்தத்தவறிய பெண்ணை கடத்திச்சென்று பாலியல் தொல்லை; நிதிநிறுவன ஊழியர்கள் அட்டகாசம்..!



Karur Women Loan Interest Issue 

 

கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியணை, தாலியாபட்டி கிராமத்தில் வசித்துவரும் நபர், பட்டியலின பெண்ணை கலப்பு திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் 2 குழந்தைகள் உள்ளனர். தம்பதிகள் தங்களின் குடும்பச்செலவுக்காக காமராஜர்புரத்தில் இருக்கும் பாலு பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.60 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அதற்காக 10% வட்டியும் செலுத்தப்பட்டு வந்துள்ளது. 

கூடுதல் வட்டிக்கு கடன் வாங்கினாலும், குடும்ப தேவையால் கடன் வாங்கி வட்டியை செலுத்தி இருக்கிறார்கள். அப்போது, வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதால், வேலைக்கு செல்ல இயலாமல் ஓய்வில் இருந்து, கடன் செலுத்த இயலாத சூழல் உருவாகியுள்ளது.

இதனால் வட்டி மற்றும் அசலைக்கேட்டு நிதிநிறுவனம் தொந்தரவு செய்ய, தொடர் அழுத்தத்தால் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் பேசி ஒருமாதம் அவகாசம் வாங்கப்பட்டுள்ளது. 

கடனை செலுத்த கரூரில் செயல்பட்டு வரும் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் கணவர் டைலராகவும், மனைவி மற்றொரு நிறுவனத்தில் பேக்கிங் வேலையும் செய்து வந்துள்ளார். குடும்ப சூழ்நிலையால் கடனை செலுத்த இயலாத நிலை ஏற்படவே, நிதிநிறுவனம் ஆட்களை அனுப்பி தினம் தொல்லை செய்துள்ளது.

கடந்த அக்.28 அன்று மாலை பணிமுடிந்து வந்தவர்களை இடைமறித்து நிதிநிறுவன ஊழியர்கள் சந்தோஷ், இளவரசன், பாலசுப்பிரமணி, பொன்னுசாமி ஆகியோர் பெண்ணின் கையைப்பிடித்து இழுத்து தகாத வார்த்தையால் பேசி இருக்கின்றனர்.

ஆத்திரமடைந்த பெண்மணி எதிர்வினையாற்ற முற்பட, அவரை மானபங்கப்படுத்திய கும்பல், ஆட்டோவில் நிதிநிறுவனத்திற்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளது. பெண்ணின் கணவருக்கும் தொடர்பு கொண்டு பணத்தை செலுத்த வற்புறுத்தியுள்ளது. 

பாலியல் தொல்லையை தடுக்க முற்பட்டபோது, வயிற்றில் எட்டி உதைத்து இருக்கிறது. பின் இரவு 9 மணிக்கு மேல் பெண்ணின் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு துரத்தியுள்ளது. 

இவர்களின் பிடியில் இருந்து தப்பி வீட்டிற்கு சென்ற பெண்மணி, நடந்ததை கூறிவிட்டு அங்கேயே மயங்கியுள்ளார். பின் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். அங்கு பெண்மணி சிகிச்சை பெற்று வருகிறார். 

அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கரூர் நகர காவல் துறையினர், நிதிநிறுவன ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.