"முத்துக்கு முத்தாக" பாணியில் 5 மகள்களை பெற்றெடுத்த தம்பதி தற்கொலை.. நெஞ்சை உலுக்கும் கடிதம்.!

"முத்துக்கு முத்தாக" பாணியில் 5 மகள்களை பெற்றெடுத்த தம்பதி தற்கொலை.. நெஞ்சை உலுக்கும் கடிதம்.!



Karnataka Chikmagalur Aged Couple Suicide Like Tamil Movie Named Muthukku Muthaga

தமிழ் மொழியில் வெளியான முத்துக்கு முத்தாக திரைப்படத்தில் வயதான காலத்தில் தம்பதி தற்கொலை செய்துகொண்டதைப்போன்ற உண்மை நிகழ்வு நடந்துள்ளது. பெற்றோர்களின் மகள்களுக்கான கடிதம் கண்ணீரை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கமகளூரு, விஜயபுரா நகரம் ஆதிபூத்தப்பா கோவில் தெருவில் வசித்து வருபவர் பசவராஜ் (வயது 80). இவரின் மனைவி லட்சுமம்மா (வயது 72). பசவராஜ் அரசுப்பள்ளி ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆவார். இந்த தம்பதிகளுக்கு 5 மகள்கள் உள்ள நிலையில், அனைவருக்கும் திருமணம் முடிந்து தங்களின் குடும்பத்தாருடன் வெவ்வேறு இடங்களில் வசித்து வருகிறார்கள். 

பசவராஜுக்கு கடந்த சில வருடமாக சிறுநீரக பிரச்சனை ஏற்பட்ட நிலையில், அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். மருத்துவமனையில் உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் எந்த முன்னேற்றமும் இல்லாமல், நாளுக்கு நாள் உடல்நலம் குன்ற தொடங்கியுள்ளது. இதனால் விரக்தியடைந்த பசவராஜ் தற்கொலை எண்ணத்திற்கு உள்ளாக, நாம் சென்றுவிட்டால் மனைவி என்ன செய்வார்? என்று யோசித்துள்ளார். 

இதனையடுத்து, தனது முடிவை மனைவியிடம் தெரிவித்த நிலையில், அவரும் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். 
தம்பதிகளின் எண்ணப்படி நேற்று முன்தினம் இரவில் இருவரும் விஷம் குடித்து இருக்கையில் அமர்ந்தவாறு தற்கொலை செய்துள்ளனர். மறுநாள் காலையில் வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததை அக்கம் பக்கத்தினர் கவனித்துள்ளனர். 

Muthukku Muthaga

வீட்டிற்குள் அவர்கள் சென்று பார்த்தபோது, வயதான தம்பதி தற்கொலை செய்தது உறுதியாகியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக அவர்களின் மகள்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவே, வீட்டிற்கு வந்த 5 பேரும் தாய் - தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த விஷயம் தொடர்பாக பசவனஹள்ளி காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தம்பதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தம்பதி எழுதி வைத்த கடிதமும் கைப்பற்றப்பட்டது. கடிதத்தில், "எனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், எனக்கு துணையாக இருந்த அவளும், நானும் தற்கொலை செய்துகொள்கிறோம். எங்களின் மகள்கள் 5 பேரும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். நாங்கள் வாழ்ந்த வீட்டை பிரச்சனை இல்லாமல் பாகம் பிரித்து கொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் மொழியில் வெளியான முத்துக்கு முத்தாக திரைப்படத்தில், 5 ஆண் பிள்ளைகளை பெற்றெடுத்த ஜோடி இறுதி நாட்களில் உடல்நலக்குறைவால், கவனிக்க ஆட்கள் இன்றி யாருக்கும் பாரமாக இருக்க வேண்டாம் என எண்ணி தற்கொலை செய்துகொள்வார்கள். அதனைப்போல துயரம் கர்நாடகாவில் நடந்துள்ளது.