முகநூல் காதல்.. சிறுமியை நகை, பணத்துடன் கடத்தி குடும்பம் நடத்திய காமுகன்.!
முகநூல் காதல்.. சிறுமியை நகை, பணத்துடன் கடத்தி குடும்பம் நடத்திய காமுகன்.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளம் கடற்கரை கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு, கடலூரை சேர்ந்த முருகவேல் (வயது 30) என்ற வாலிபருக்கு இடையே முகநூல் வாயிலாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியுடன் கொண்ட நட்பு பழக்கத்தை காதல் மொழிபேசி முருகவேல் பூக்க வைத்துள்ளார். இதனையடுத்து, இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி முருகவேல் தனது ஊருக்கு அவரை கடத்தி சென்ற நிலையில், மகளை காணாத பெற்றோர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், மகள் மாயமான போது வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் 28 சவரன் நகைகள் ஆகியவற்றை எடுத்து சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் சிறுமியை தேடி வந்த நிலையில், அவர் முருகவேலால் கடலூர் கடத்தி செல்லப்பட்டது அம்பலமானது. மேலும், முருகவேலுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து மனைவி இருப்பதும் அம்பலமானது. இதனையடுத்து, குமரி காவல் துறையினர் கடலூருக்கு சென்றனர்.
அங்கு வாடகை வீட்டில் இருந்த முருகவேலை கைது செய்த அதிகாரிகள், 16 வயது சிறுமியை மீட்டனர். விசாரணையில், சிறுமியை திருமணம் செய்வதாக ஏமாற்றி, அவரின் பணத்தில் வீடெடுத்து குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்தது. முருகவேலை கைது செய்து கன்னியாகுமாரி அழைத்து வந்த அதிகாரிகள், இதுபோல வேறு சிறுமிகளை ஏமாற்றியுள்ளாரா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.