தொழில் போட்டியால் பொறாமை: பெண் வியாபாரியை அடித்தே கொன்ற கும்பலால் பரபரப்பு..!



Jealous gang beat up female trader due to business competition

கோயம்புத்தூர், சேரன்மாநகர் அருகேயுள்ள வி.ஆர்.எஸ்.நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி கலாராணி (50). இவர் விளாங்குறிச்சி பகுதியில் சாலையோரத்தில் காய்கறி கடை வைத்து நடத்தி வந்தார். இவரது கடையின் அருகே தேவி (42) என்பவரும் கடை நடத்தி வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே தொழில் போட்டியின் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் கலாராணி வழக்கம் போல் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை என்பதால் கலாராணியின் கடையில் காய்கறி வாங்க கூட்டம் அலைமோதியது. அதே நேரத்தில் தேவியின் கடைக்கு ஒருவர் கூட வரவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக கலாராணி மீது பொறாமையடைந்த தேவி தனது மகன் மணிகண்டன் (27), தங்கை பாக்கியலட்சுமி (32) ஆகியோருடன் அவரது கடைக்கு சென்றுள்ளார்.

கடையில் தனியாக இருந்த கலாராணியிடம், உனது கடைக்கு மட்டும் ஆள் வருகிறது எனது கடைக்கு யாரும் வரவில்லை என கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த தேவி தனது மகன், தங்கையுடன் சேர்ந்து கலாராணியை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் அவருக்கு, கை, கால்கள் என பல இடங்களில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரது நெஞ்சிலும் கையால் குத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து நெஞ்சு வலிப்பதாக கூறிய கலாராணி நிலை குலைந்து விழுந்துள்ளார். இதனையடுத்து 3 பேரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். அக்கம்பக்கத்தோர் ஓடி வந்து கலாராணியை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தன. அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கலாராணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தேவி, அவரது மகன் மணிகண்டன், அவரது தங்கை பாக்கியலட்சுமி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததோடு அவர்களை கைது செய்துள்ளனர்.