சொத்து தகராறில் பெரியப்பாவை அரிவாளால் வெட்டிக்கொன்ற தம்பி மகன்... சென்னை ஆர்.ஏ. புரத்தில் பரபரப்பு..!!

சொத்து தகராறில் பெரியப்பாவை அரிவாளால் வெட்டிக்கொன்ற தம்பி மகன்... சென்னை ஆர்.ஏ. புரத்தில் பரபரப்பு..!!


in-a-property-dispute-periyappa-was-killed-by-his-young

சென்னையில், சொத்து பிரச்னையில் ஏற்பட்ட தகராறில் காய்கறி வியாபாரி ஒருவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் படவேட்டம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் பொன்ராஜ் (55). தூத்துக்குடி சேர்ந்த பொன்ராஜ் 15 வருடங்களுக்கு முன்பு சொந்த ஊரிலிருந்து இந்த பகுதியில் வந்து குடியேறியவர். இந்த பகுதியிலேயே காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் பொன்ராஜூக்கும் அவரது தம்பி அந்தோணிக்கும், தூத்துக்குடியில் இருக்கும் சொத்து தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் பொன்ராஜூக்கும் அவரது சகோதரர் அந்தோணி மகன் அற்புதராஜ்(32) க்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. தனது தந்தையின் சொத்தை சரியாக பிரித்து தரும்படி அற்புதராஜ் தனது பெரியப்பாவிடம் அடிக்கடி கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பொன்ராஜ் குடும்பத்தினர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். எனவே பொன்ராஜ் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை தெரிந்து கொண்ட அற்புதராஜ், நேற்று இரவு பொன்ராஜ் வீட்டிற்கு சென்று தங்களுக்கு சேரவேண்டிய சொத்தை பிரித்து தரும்படி கூறி தகராறு செய்துள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது பொன்ராஜ் உங்களுக்கு சொத்து எதுவும் தரமுடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அற்புதராஜ் கையில் வைத்திருந்த அரிவாளால் பொன்ராஜை கொடூரமாக வெட்டி கொன்று விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். 

அதன் பிறகு அற்புதராஜ் தனது உறவினர்களுக்கு போன் செய்து பெரியப்பா பொன்ராஜை சொத்து தகராறில் வெட்டி கொலை செய்துவிட்டேன் வந்து உடலை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த பொன்ராஜ் உறவினர்கள் உடனே சம்பவம் குறித்து அபிராமபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொன்ராஜ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அற்புதராஜை செல்போன் சிக்னலை வைத்து தேடி வருகின்றனர். குடும்ப சொத்து  காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆர்.ஏ.புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.