தண்டவாளத்தில் தலையில் காயங்களுடன் சடலமாக கிடந்த ஐ.ஐ.டி மாணவி!. போலீசார் தீவிர விசாரணை..!

தண்டவாளத்தில் தலையில் காயங்களுடன் சடலமாக கிடந்த ஐ.ஐ.டி மாணவி!. போலீசார் தீவிர விசாரணை..!



IIT student lying dead on the rail with head injuries

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் மேகா ஸ்ரீ (30). இவர் டெல்லியில் உள்ள கல்லூரியில் எம்.டெக்., பி.எச்.டி  முனைவர் படிப்பை படித்துள்ளார். இந்த நிலையில், சென்னை அடையாறு ஐ.ஐ.டி-யில் 3 மாத ஆராய்ச்சி படிப்பு பயிற்சிக்காக அங்கு சேர்ந்து படித்துவருவதாக கூறப்படுகிறது. அடையாறு பகுதியிலுள்ள கல்லூரி விடுதியில் தங்கி ஆராய்ச்சி படிப்பை படித்துக்கொண்டிருந்த மேகா ஸ்ரீ, நேற்று காலை ஆவடி-இந்துக்கல்லூரி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தின் ஓரத்தில் தலையில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ரயில் தண்டவாளத்தில் வேலை செய்து கொண்டிருந்த ரயில்வே ஊழியர் ஒருவர், இளம்பெண் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இந்த சம்பவம் குறித்து ஆவடி ரயில்வே காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆவடி ரயில்வே காவல்துறையினர், இறந்து கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர், இளம்பெண் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இளம் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த அடையாள அட்டையை கொண்டுஅவர் யார் என்பதை அடையாளம் கண்டனர். மேலும், ஓடும் ரயிலில் சென்ற போது தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு மாணவி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று ஆவடி ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.