புதுப்பெண் தற்கொலை விவகாரத்தில் புதிய திருப்பம்! கணவன் அரங்கேற்றிய நாடகம்! அம்பலமான மர்மம்!

புதுப்பெண் தற்கொலை விவகாரத்தில் புதிய திருப்பம்! கணவன் அரங்கேற்றிய நாடகம்! அம்பலமான மர்மம்!


husband killed wife and make suicide drama

நாகை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் பாலு. இவர் தனியார் டிராக்டர் கம்பெனி ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருத்துறைப்பூண்டி மடப்புரம் பகுதியைச் சேர்ந்த நாடியம்மாள் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமான சில நாட்களிலேயே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நாடியம்மாள் அண்மையில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து நாடியம்மாளின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில்  நாடியம்மாளின் பெற்றோர் தங்களது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

suicide

இந்நிலையில் நாடியம்மாளின் கணவர் பாலு போலீசில்  சரண் அடைந்து தனது மனைவியை கொன்று தான்தான் தூக்கில் தொங்க விட்டேன் என கூறியுள்ளார். மேலும் இது குறித்து அவர் வாக்குமூலத்தில் கூறியதாவது,  என் மனைவிக்கு திருமணத்திற்கு முன்பே வேறு ஒருவருடன் தகாத பழக்கம் இருந்துள்ளது. திருமணத்திற்கு பின்னரும் அதனை அவர் தொடர்ந்து வந்தார். இதனால் நான் என் மனைவியை பலமுறை கண்டித்தேன். ஆனாலும் அவர் தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

 மேலும் நான் எப்பொழுது போன் செய்தாலும் அவர் பிஸியாகவே இருந்தார்.இதனால் எங்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் சம்பவத்தன்று காலை நாடியம்மாள் என்னிடம் சண்டை போட்டு வீட்டில் இருந்த பொருட்களை தூக்கி வீசினார்.இதனால் ஆத்திரமடைந்த நான் நைலான் கயிற்றால் நாடியம்மாளின் கழுத்தை நெரித்து கொலைசெய்தேன். பின் சடலத்தை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடினேன் என கூறியுள்ளார்.