
ஆரணி அருகே வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து!.. தம்பதியினர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்..!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சமையல் செய்ய கேஸ் அடுப்பை பற்ற வைத்தபோது சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தசரா பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பட்டாபி (45) இவர் ஒரு நெசவு தொழிலாளி. இவருடைய மனைவி லலிதா இருவர் மட்டும் ஓட்டு வீட்டில் தனியாக வசித்துவந்தனர்.
இன்று காலை சமையல் செய்வதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்த போது சிலிண்டர் திடீரென வெடித்தது. இந்த விபத்தில் வீட்டின் மேற்கூரையில் இருந்த ஓடுகள் தரைமட்டமானது. வீட்டிலிருந்த பட்டாபி லலிதா ஆகிய இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆரணி தீயணைப்பு வீரர்கள் தீயை மேலும் பரவாமல் தடுக்க தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். விபத்து நடந்த இடத்திற்கு வந்த தாசில்தார் க.பெருமாள், வருவாய் ஆய்வாளர் விஜயா, கிராம நிர்வாக அலுவலர் தமிழரசன் ஆகியோர் தீ விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த தீ விபத்தினால் சுமார் ரூ 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. மேலும் வருவாய் துறை சார்பாக அரிசி, சேலை வேட்டி, மன்னனை மற்றும் நிவாரண உதவியாக ரூ 5000 ஆகியவற்றை வழங்கினார்.
Advertisement
Advertisement