சிக்கிய சிறுத்தை: கூண்டில் அடைத்து வனப்பகுதியில் கொண்டு சேர்த்த வனத்துறையினர்..!

சிக்கிய சிறுத்தை: கூண்டில் அடைத்து வனப்பகுதியில் கொண்டு சேர்த்த வனத்துறையினர்..!



forest department caught the leopard that was threatening the villagers

கிராம மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை போராடி பிடித்த வனத்துறையினர் அதனை வனத்தில் கொண்டு சேர்த்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகிலுள்ள ஓசூர் கிராமத்தில் ஒரு கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் சிறுத்தை ஒன்று பதுங்கியிருந்து, அவ்வப்போது கிராமத்தில் உள்ள கால்நடைகளை வேட்டையாடி வந்தது. இதனால் அந்த கிராம மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, வனத்துறையினர் சிறுத்தையை பிடிப்பதற்காக கூண்டு வைத்தனர்.

பல நாட்களாக கூண்டிற்குள் சிக்காமல் தப்பி வந்த சிறுத்தை, கடந்த வியாழனன்று காலை கூண்டிற்குள் சிக்கிக் கொண்டது. சிறுத்தை சிக்கியதை அறிந்த வனத்துறையினர், கூண்டிற்குள் இருந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி அதனை வேறு கூண்டுக்கு மாற்ற முயற்சி செய்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக அந்த சிறுத்தை கூண்டில் இருந்து தப்பியது. இதன் காரணமாக கிராம மக்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மயக்க ஊசி செலுத்தப்பட்டதால் தப்பிய சிறுத்தை வெகு தூரம் செல்ல வாய்ப்புகள் குறைவு என்பதால் அதனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தப்பி ஓடிய சிறுத்தை கல்குவாரி பகுதியில் சோர்வுடன் படுத்திருப்பதை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தைக்கு மீண்டும் மயக்க ஊசி செலுத்தி, அதனை பிடித்தனர். பின்னர் அந்த சிறுத்தையை கூண்டிற்குள் அடைத்த வனத்துறையினர், அதனை நேற்றிரவு வனத்துறை வாகனம் மூலம் தெங்குமரஹடா மங்களபட்டி பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.