போனில் பேசிய மகள்., கண்டித்து வேலைக்கு சென்ற தந்தை.. தூக்கில் சடலமாக தொங்கிய கல்லூரி மாணவி.!

போனில் பேசிய மகள்., கண்டித்து வேலைக்கு சென்ற தந்தை.. தூக்கில் சடலமாக தொங்கிய கல்லூரி மாணவி.!



Erode College Girl Suicide

எந்த நேரமும் செல்போனில் பேசிக்கொண்டு இருந்த மகளை தந்தை கண்டித்ததால், கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை கிராமத்தில் வசித்து வருபவர் இலட்சுமணன். இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். லட்சுமணனின் மனைவி வசந்தி. தம்பதிகளுக்கு துளசிமணி (வயது 19), கீர்த்தனா (வயது 17) என்ற 2 மகள்களும், கவின் (வயது 14) என்ற மகனும் இருக்கின்றனர். 

மூத்த மகளான துளசிமணி படித்துவிட்டு வீட்டில் இருக்கிறார். கீர்த்தனா நம்பியூரில் செயல்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரியில் முதல் வருடம் படித்து வந்துள்ளார். கவின் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கீர்த்தனா கல்லூரி விடுதியில் தங்கியிருந்து தினமும் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக வீட்டிற்கு வந்த கீர்த்தனா, கல்லூரிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். மேலும், செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை கவனித்த கீர்த்தனாவின் தந்தை மகளை கண்டித்து இருக்கிறார். நேற்றும் வழக்கம்போல கீர்த்தனா செல்போனில் பேச, தந்தை மகளின் செல்போனை பிடுங்கி வேலைக்கு எடுத்துச்சென்றுள்ளார்.

erode

இதனால் மனதுடைந்துபோன கீர்த்தனா, வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். வேலைக்கு சென்றுவிட்டு மாலை 5 மணியளவில் வீட்டிற்கு வந்த இலட்சுமணன், வீட்டின் கதவை தட்டியும் மகள் திறக்கவில்லை. சந்தேகமடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து லட்சுமணன் வீட்டிற்குள் சென்றுள்ளார். 

அப்போது, வீட்டில் உள்ள அறையில் மகள் கீர்த்தனா பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அவரை மீட்ட குடும்பத்தினர் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, கீர்த்தனா இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மாணவியின் மரணத்திற்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை கண்டித்ததால் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.