குடும்பத்தை பிரித்ததாக நினைத்து மாமியாரை தீ வைத்து கொளுத்திய மருமகள்; ஊசலாடும் உயிர்.!

குடும்பத்தை பிரித்ததாக நினைத்து மாமியாரை தீ வைத்து கொளுத்திய மருமகள்; ஊசலாடும் உயிர்.!



Cuddalore Sethiatope Woman Murder Attempt by Daughter in Law

கணவன் - மனைவி பிரச்சனைக்கு மாமியாரே காரணம் என்று எண்ணிய மருமகள், மாமியாருக்கு தீ வைத்து கொளுத்திய பயங்கரம் நடந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாதோப்பு பெரிய நெற்குணம் கிராமத்தில் வசித்து வருபவர் ராமமூர்த்தி. இவரது மனைவி சிந்தாமணி (வயது 65). தம்பதியின் இளையமகன் வேல்முருகன். நேற்று முன்தினம் இரவில் வேல்முருகன் வீட்டிற்கு பால் பாக்கெட் வைக்க வந்த மாமியார் சிந்தாமணியை வேல்முருகனின் மனைவியான மருமகள் சங்கீதா (வயது 31) இடைமறித்து கதவை மூடி மாமியாரின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். 

இதனால் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்து சிந்தாமணி அலறவே, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சங்கீதாவுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது. கணவன் - மனைவிக்குள் இருந்த பிரச்சனை காரணமாக சங்கீதா மாமியாருக்கு தீ வைத்துள்ளார். 

Cuddalore

சங்கீதா தனது தாயார் பொற்கொடியிடம் அவ்வப்போது செல்போனில் பேசி வந்துள்ளார். இது மாமியார் சிந்தாமணிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தனது மகன் வேல்முருகனிடம் தவறாக சித்தரித்து கூறியதால், இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். 

இதற்கிடையே, தங்களின் குடும்ப பிரச்சனைக்கு மாமியாரே காரணம் என்றும் கருதிய சங்கீதா, சம்பவத்தன்று மாமியாரை கொலை செய்யும் திட்டத்துடன் அவரின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனையடுத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சேத்தியாதோப்பு காவல் துறையினர், சங்கீதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிந்தாமணிக்கு சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.