
corona patient Dead body found in the Koovam River
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பல தளர்வுகளுடன் பல கட்டங்களாக நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலத்திலும் தமிழகத்தில் கொரோனா பரவும் வேகம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
தமிழகத்திலே, குறிப்பாக சென்னையில் தான் கொரோனா பரவல் அபாய கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இதைத்தொடர்ந்து சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று முதல் வருகிற 30-ந் தேதி வரை, 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த 45 வயது நோயாளி ஒருவர், மருத்துவமனையில் இருந்து சில தினங்களுக்கு முன் தப்பியோடியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், சிவானந்தா சாலையில் உள்ள கூவம் ஆற்றில் நேற்று அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், கூவம் ஆற்றில் மிதந்துகிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்ததில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து மாயமான கொரோனா நோயாளி என தெரியவந்தது. இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எப்படி உயிரிழந்தார் என்பது குறித்த தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.
Advertisement
Advertisement