நீதிமன்ற உத்தரவை மதிக்காத ஊராட்சிமன்றத்தை கலைத்திடுக!..முதல்வரின் தனிப்பிரிவுக்கு வரும் கோரிக்கைகளால் திணறும் தி.மு.க..!

நீதிமன்ற உத்தரவை மதிக்காத ஊராட்சிமன்றத்தை கலைத்திடுக!..முதல்வரின் தனிப்பிரிவுக்கு வரும் கோரிக்கைகளால் திணறும் தி.மு.க..!



complaint-with-the-chief-minister-s-private-office

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை மீட்க கோரி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், உரிய நடவடிக்கை எடுக்காத பாம்பன் ஊராட்சியை கலைக்க கோரி முதலமைச்சர் தனிப்பிரிவில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார் மனு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியை சேர்ந்தவர் நபிஷா பானு( 55). இவருக்கு சொந்தமான நிலம் பாம்பன் மார்க்கெட் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை மதிமுக மாவட்ட செயலாளரும், ஊராட்சி மன்ற தலைவராக இருந்த பேட்ரிக் உள்ளிட்ட 4 பேர் ஆக்கிரமித்துள்ளனர். 

அந்த நிலத்தை மீட்டு தரும்படி நபிஷா பானு மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனு மீது மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றி கொடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு பிறப்பித்து ஏழு ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை நம்பிஷா பானு புகார் மனு அளித்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளில் 4க்கும் மேற்பட்ட  புகார் மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளார். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பிடிஓ மற்றும் ராமேஸ்வரம் தாசில்தாருக்கு கடிதம் மட்டுமே கடந்த 8 வருடங்களாக சென்று கொண்டு உள்ளது. ஆனால் நீதிமன்ற உத்தரவு மீது உரிய நடவடிக்கை எடுக்காத நிலை தான் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் தனது நிலத்தை மீட்டுத்தரக் கோரி நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்த நிலையில் அதனை செயல்படுத்தாத பாம்பன் பஞ்சாயத்தை கலைக்கக் கோரிப் முதலமைச்சர் தனிப்பிரிவில் தற்போது புதிய புகார் ஒன்றை கொடுத்துள்ளார். 

இந்த புகார் மனு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நபிஷா பானு தனது சேமிப்பில் வாங்கிய இடத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும் இன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவருமான பேட்ரிக் உள்ளிட்டவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் இதேபோல தனது இடத்தில் மேலும் 3 பேர் கடைகள் வைத்து உள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளார். 

நீண்ட போராட்டத்திற்கு பிறகு நிலத்தை மீட்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் வந்த நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் நீதிமன்றம் சென்றதாகவும் கூறியுள்ளார். மனுவை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்பாளர்களின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது என  அவர் தெரிவித்தார். இருந்த போதிலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறினார். 

நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொள்ளாத மாவட்ட ஆட்சியர் பாம்பன் ஊராட்சி மன்ற தலைவரை மேல்முறையீடு செய்யும் படி உத்தரவிட்டதாக தெரிவித்தார். பாம்பன் பகுதியில் உள்ள நிலத்தை பாம்பன் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும் இன்னால் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரும் தான் ஆக்கிரமித்துள்ளனர். நிலம் ஆக்கிரமிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக இருக்கக்கூடிய நபர், இந்த நிலம் தொடர்பான வழக்கில் எப்படி அவர் மேல் முறையீடு செய்வார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே தான் தமிழக முதலமைச்சர் இந்த பிரச்சினையில் தீர்வு ஏற்படுத்திக் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் புகார் தெரிவித்து உள்ளதாக கூறினார்.