டெல்லியில் மக்களுக்கு தவெக அரசு செய்த தரமான சம்பவம்! பிரதமர் மோடியிடம் கொடுத்த 'மெகா டிமாண்ட்' லிஸ்ட் இதோ.... அதிர்ந்து போன அரசியல் களம்..!!
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்கேற்று மாநிலத்தின் முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிதி உரிமைகள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தார். சாலை, ரயில், கல்வி, குடிநீர் மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மத்திய அரசின் உடனடி ஒத்துழைப்பை அவர் வலியுறுத்தினார்.
மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் எனக் குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டிற்கான நிலுவை நிதி மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு விரைவில் அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சாலை மற்றும் ரயில் திட்டங்களுக்கு முக்கிய கோரிக்கை
தமிழ்நாட்டின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், ஜி.எஸ்.டி. சாலையின் செங்கல்பட்டு–திருச்சி, திருச்சி–கரூர் மற்றும் கரூர்–கோயம்புத்தூர் பகுதிகளை ஆறு வழிச்சாலைகளாக விரிவுபடுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் என முதலமைச்சர் கோரினார்.
அதேபோல், மாதவரம்–சோழவரம் இடையே உயர்த்தப்பட்ட வழித்தடம் அமைப்பதற்கும், சென்னை முதல் கன்னியாகுமரி வரை அதிவேக ரயில் வழித்தடத்தை உருவாக்குவதற்கும் ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளுக்கு தேவையான உத்தரவுகளை வழங்குமாறு வலியுறுத்தினார்.
டிஜிட்டல் இணைப்பு மற்றும் குடிநீர் திட்டம்
தமிழ்நாட்டில் பாரத்நெட் இரண்டாம் கட்டத் திட்டம் 97 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட விஜய், அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் தடையற்ற இணைய வசதி கிடைக்க மத்திய அரசு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றார்.
மேலும், ரூ.2,283.40 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள ஒகேனக்கல் மூன்றாம் கட்ட கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட நிதியை விரைவாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
கல்வி நிதி மற்றும் திருக்குறளுக்கு தேசிய அங்கீகாரம்
கல்வித் துறையைப் பற்றி பேசிய முதலமைச்சர், ‘ஒருங்கிணைந்த கல்வி’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.3,284 கோடி நிலுவை நிதியை எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். புதிய கல்விக் கொள்கை அல்லது மும்மொழிக் கொள்கையை ஏற்கும் நிபந்தனையுடன் நிதி வழங்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
இறுதியாக, இந்தியாவின் மதச்சார்பற்ற மற்றும் மனிதநேய மரபின் அடையாளமாக விளங்கும் திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். “மாநிலங்கள் வலுப்பெறும்போதுதான் இந்தியாவும் வலிமை பெறும்” எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.