ஒரே நாள்.. 10 மணிநேரத்தில் சென்னையை புரட்டிப்போட்ட மழை.. 145 இடங்கள் மிதப்பு, 3 பேர் பலி, 27 மரங்கள் முறிவு.!

ஒரே நாள்.. 10 மணிநேரத்தில் சென்னையை புரட்டிப்போட்ட மழை.. 145 இடங்கள் மிதப்பு, 3 பேர் பலி, 27 மரங்கள் முறிவு.!


Chennai Rain 30 Dec 2021 3 Died 145 Places Struggle Flood Road 27 Trees Fell Down

தமிழகத்திற்கு 4 நாட்கள் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், சென்னையில் நேற்று மதியம் முதல் இரவு 10 மணிவரை நல்ல மழை பெய்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழையும் பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சாலைகளில் சூழ்ந்துகொண்டு காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட நேரிட்டது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 மணிநேரம் தொடர்ந்து பெய்த மழைக்கே தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பிற்பகல் சுமார் 3 மணிக்கு மேல் சாலைகளில் வெள்ளநீர் ஆட்கொண்டது. இதனால் சென்னை நகரின் பிரதான சாலைகள் குளம்போல காணப்பட்டன. சென்னை நகரில் 145 இடங்களில் மழை வெள்ளம் சாலைகளில் நிரம்பியது. 

chennai

கடந்த அக்., மற்றும் நவ. மாதத்தில் பெய்த மழையின் போதும் 145 இடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. மக்கள் யாரும் நேற்று பெய்த மழையை எதிர்பார்க்காமல் இருந்த நிலையில், திடீரென மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீரினை அகற்றும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நகரின் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் மின்னிணைப்பும் துண்டிக்கப்பட்டது. 

நேற்றைய தினத்தில் இரவு 8 மணிவரை தங்களது பகுதியில் வெள்ளம் இருப்பதாக 532 புகார்கள் பெறப்பட்டுள்ளது. இந்த புகார்களின் பேரில் அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் அதிகாலை நேரத்தில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள சாலைகள் இயல்பு நிலைக்கு திரும்பியது. நேற்று இரவு அண்ணாநகர் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. 

chennai

தி. நகர், திருமலைப்பிள்ளை சாலை, அபிபுல்லா ரோடு, ஆற்காடு ரோடு, பேப்பர் மில் சாலை, ராஜமன்னார் சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளில் அதிகளவு வெள்ளநீர் இருந்தது. மழை தண்ணீர் சேதம் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க 1913 என்ற உதவி எண்ணிலும் மக்கள் புகார் அளிக்கலாம். மேற்கு மாம்பலம், அசோக் நகர், வடபழனி போன்ற பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியிருந்துள்ளன. 

இன்று காலை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று நேரடி களஆய்வில் ஈடுபட்டனர். இதன்போது செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், "கடந்த 10 வருடமாக சென்னையை சீரழித்துவிட்டனர். எதிர்வரும் பருவமழைக்குள் அனைத்தும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தெரிவித்த பதிலில், "சென்னையில் 27 இடத்தில் மரங்கள் சாய்ந்துள்ளது. மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்" என்று தெரிவித்தார்.