வேதிப்பொருள் ஆராய்ச்சி சிறுவனின் உயிரை காவு வாங்கிய பயங்கரம்; சென்னையில் நடந்த விபரீதம்.. பெற்றோரே பிள்ளைகளை கண்காணியுங்கள்.!

வேதிப்பொருள் ஆராய்ச்சி சிறுவனின் உயிரை காவு வாங்கிய பயங்கரம்; சென்னையில் நடந்த விபரீதம்.. பெற்றோரே பிள்ளைகளை கண்காணியுங்கள்.!



Chennai Kolathur Boy Died by Chemical Explosion 

 

சென்னையில் உள்ள கொளத்தூர், முருகன் நகரில் வசித்து வருபவர் ஹரிஹரன் (வயது 49). இவரின் மனைவி சிவ பிரியா. தம்பதிகளுக்கு 17 வயதுடைய ஆதித்ய பிரணவ் என்ற மகன் இருக்கிறார். தற்போது குடும்பத்துடன் வில்லிவாக்கம் திருநகர் பகுதியில் வசித்து வருகிறார்கள். கடந்த 2019ல் சிவபிரயா மறைந்துவிட, தந்தையும் - மகனும் தாங்கள் இருந்த வில்லிவாக்கத்தில் இருந்து வெளியேறி கொளத்தூரில் வீடுவாங்கி வசித்து வந்தனர். 

மேற்கு மாம்பலத்தில் ஹரிஹரன் பேட்டரி கடை வைத்துள்ளார். ஆதித்ய பிரணவ் முகப்பேர் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அறிவியல் வகுப்புகளை உன்னிப்பாக கவனித்து இருக்கிறார். மேலும், தனது கண்டுபிடிப்புக்காக வேதிப்பொருளையும் பயன்படுத்தி இருக்கிறார். 

இதனிடையே, நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு மேல் ஹரிஹரன் வேலைசென்றபின், வீட்டில் தனியே இருந்த பிரணவ் வேதிப்பொருள் பயன்படுத்தி ஆராய்ச்சி மேற்கொண்டதாக தெரியவருகிறது. இதனிடையே அவரின் வீட்டில் பயங்கர சத்தம் கேட்டது, அக்கம் பக்கத்து வீடுகளும் அதிர்ந்துபோனதால் மக்கள் ஓட்டம் பிடித்தனர். ப்ரணவ்வின் வீடு தரைமட்டமானது. 

தகவல் அறிந்த காவல் துறையினர், உடனடியாக பெரிய அசம்பாவிதம் நடந்து இருக்கலாம் என உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் நிகழ்விடத்தில் இணை கமிஷனர் விஜயகுமார், கொளத்தூர் துணை கமிஷனர் பாண்டியராஜன் தலைமையில் 
காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மீட்பு பணிகளும் துரிதமாக நடைபெற்றன. கெமிக்கல் தொடர்ந்து வெளியேற மீட்பு பணிகளை தள்ளிப்போட்டாலும், அதிகாரிகள் முயற்சித்து வீட்டிற்குள் சென்றபோது ஆதித்ய பிரணவ் உடல் சிதறி பலியானது தெரியவந்தது. 

தகவல் அறிந்து வந்த அவரின் தந்தையும் மகனின் உடலை பார்த்து கதறியழுதார். பின் அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. வேதியியல் ஆராய்ச்சியில் ஆர்வமாக இருந்து வந்த பிரணவ், அவரின் முயற்சியில் ஏற்பட்ட தோல்வியால் பலியாகி இருக்கிறார் என்பது உறுதியானது. தடயவியல் நிபுணர்கள் மாதிரிகளை சேகரித்து இருக்கின்றனர். 

சிறுவனின் கைகள் இடிபாடுகளுக்கு நடுவே இருந்தது. அதனை மீட்க முதலில் அதிகாரிகள் வெறும் கையுடன் முயன்றபோது, தீயணைப்பு படையினருக்கு எரிச்சல் போன்றவை ஏற்பட்டது. இதனால் பாதுகாப்புடன் உடல் மீட்கப்பட்டது. இந்த வெடிப்பு சம்பவம் சுமார் 3 கி.மீ வரை கேட்டுள்ளது. அருகில் இருந்த வீடுகளில் ஜன்னலும் சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களும் பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர். தடயவியல் ஆய்வுக்கு பின்னரே வெடிவிபத்திற்கான காரணம் தெரியவரும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பே கெமிக்கலை வைத்து தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த பிரணவ், ஒருநாள் கரும்புகையை கசியவிட்டுள்ளார். இதனால் அக்கம் பக்கத்தினர் அப்போதே ப்ரணவின் தந்தை மற்றும் ப்ரணவை எச்சரித்து இருக்கின்றனர். தந்தையும் மகனை கண்டித்துள்ளார். ஆனால், வேதிப்பொருள் ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டதால் ஆதித்ய பிரணவ் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வீட்டில் குழந்தைகள் வேதிப்பொருள், செல்போன் பேட்டரி, மீதமுள்ள பட்டாசுகள் ஆகிவையற்றை வைத்து ஆராய்கிறோம் என்ற பெயரில் விளையாடினால் அவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் கடமை ஆகும். இல்லையேல் இவ்வாறான விபரீதங்கள் தொடரும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.