கவர்னர் உரைக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்...! தமிழக சட்டசபையில் பரபரப்பு...!!



Assembly resolution against Governor's speech...! There is excitement in the Tamil Nadu Assembly...

தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றினார். அப்போது, திராவிட மாடல் என்ற வார்த்தையை பேசாமல் தவிர்த்தார். ஆளுநர் உரையில் அச்சிடப்பட்டிருந்த இருந்த "வளர்ச்சியுடன் கூடிய திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ்" என்ற வாக்கியத்தை ஆளுநர் உரையாற்றும் போது பேசாமல் தவிர்த்துள்ளார். 

2 மற்றும் 3 பக்கத்தில் இருந்த திராவிட மாடல் என்ற வார்த்தையையும் பேசாமல் தவிர்த்துள்ளார். இதேபோல் 46-ஆம் பக்கத்தில் இருந்த '"சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதில் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது" என்ற வாக்கியத்தையும் ஆளுநர் தவிர்த்துள்ளார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆளுநர் உரையைக்கு பின்னர் சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, அரசின் உரையை ஆளுநர் முழுமையாக படிக்காதது வருத்தம் அளிக்கிறது என்றும், ஆளுநர் பேசியது அரசின் கொள்கைக்கு மாறானது என்று கூறினார். மேலும், அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் முறையாக படிக்காதது, விதியை மீறிய செயல் என்று கூறினார்.

எனவே, இன்று அச்சிடப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட ஆங்கில உரை மற்றும் பேரவை தலைவரால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும் அவைக்குறிப்பில் ஏற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை முதலமைச்சர் முன்மொழிந்தார். அச்சிடப்பட்டதற்கு மாறாக ஆளுநர் படித்த பகுதிகள் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்ற தீர்மானத்தையும் முதலமைச்சர் முன்மொழிந்தார். 

ஒருமனதாக இந்த தீர்மானங்களை பேரவை நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். தீர்மானத்தை முதலமைச்சர் முன்மொழிந்து கொண்டிருந்தபோது, அவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார். அதன்பிறகு முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

இதைத் தொடர்ந்து முதலமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர். அவையில் ஆளுநர் இருக்கும்போது அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது மரபல்ல என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.