அரியர் மாணவர்களின் அரசனே.... இந்த நன்றியை ஒருபோதும் மறக்கமாட்டோம்.! முதல்வரை புகழ்ந்து போஸ்டர் ஒட்டிய அரியர் மாணவர்கள்!
அரியர் மாணவர்களின் அரசனே.... இந்த நன்றியை ஒருபோதும் மறக்கமாட்டோம்.! முதல்வரை புகழ்ந்து போஸ்டர் ஒட்டிய அரியர் மாணவர்கள்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளி கல்லூரிகள் 4 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்னன. இதனையடுத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கவில்லை. மாணவர்கள் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஜூலை 23-ந்தேதி அறிவித்தார். ஆனால் யூ.ஜி.சி. கல்லூரி இறுதித் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பதில் பிடிவாதமாக இருந்தது.
இந்நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் நலன் கருதி, தமிழக அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர மற்ற செமஸ்டர் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணாக்கர்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
இந்தநிலையில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து அரியர் மாணவர்கள் என்ற பெயரில் சாலையில் போஸ்டரும் ஒட்டப்பட்டது. அந்த போஸ்டரில் அரியர் மாணவர்களின் அரசனே,
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு" என திருக்குறளையும் குறிப்பிட்டு முதல்வரை வாழ்க.. வாழ்க என வாழ்த்தியுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.