விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி இல்லையா.? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி இல்லையா.? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!


announcement about vinayagar chathurthi

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த தமிழக அரசு தடை விதித்தது. வீடுகளில் சிறிய அளவில் சிலை வைத்து வழிபாடு செய்யலாம் என்று கூறியது. எனினும், அரசின் இந்த உத்தரவை மீறி விநாயகர் சிலை வழிபாடு நடத்துவோம் என்று இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கூறின. 

இந்தநிலையில், விநாயகர்‌ சதுர்த்தி விழா கொண்டாட்டம் தொடர்பாக தமிழக அரசு தனது இறுதி நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. அதில், 22.8.2020 அன்று விநாயகர்‌ சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ்‌ தொற்று பரவல்‌ காரணமாக, தேசிய பேரிடர்‌ மேலாண்மை சட்டத்தின்‌ கீழ்‌ மத்திய அரசின்‌ உள்துறை அமைச்சகம்‌ 29.7.2020 அன்று வெளியிட்ட அறிவிக்கையின்படி, மதம்‌ சார்ந்த விழாக்கள்‌, கூட்டு வழிபாடுகள்‌ ஆகியவை நாட்டின்‌ அனைத்து பகுதிகளிலும்‌ தடை செய்யப்பட்டுள்ளது.

vinayagar chathurthi

மத்திய அரசின்‌ வழிகாட்டுதலின்படியும்‌, மாநிலத்தில்‌ கொரோனா தொற்றினால்‌ நிலவிவரும்‌ சூழ்நிலையைக்‌ கருத்தில்‌ கொண்டும்‌, கொரோனா நோய்‌ தொற்று பரவுதலை தடுக்கும்‌ வகையில்‌, பொது இடங்களில்‌ விநாயகர்‌ சிலைகள்‌ அமைப்பதையும்‌, பொது இடங்களில்‌ வழிபாடு நடத்துவதையும்‌, ஊர்வலமாக எடுத்துச்‌ சென்று நீர்நிலைகளில்‌ கரைப்பதையும்‌, பொதுமக்கள்‌ நலன்‌ கருதி தடை செய்யப்பட்டு ஏற்கெனவே ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில்‌, பொதுமக்கள்‌ அவரவர்‌ வீடுகளிலேயே விநாயகர்‌ சதூர்த்தி விழாவினை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிமன்றமும்‌ அரசின்‌ ஆணையை பொதுமக்கள்‌ பின்பற்ற வேண்டும்‌ என உத்தரவிட்டுள்ளது. எனவே, மத்திய மற்றும்‌ மாநில அரசுகளின்‌ உத்தரவுகளையும், வழிகாட்டி நெறிமுறைகளையும்‌ பின்பற்றி, கொரோனா நோய்‌ தொற்று பரவலை தடுக்கும்‌ பொருட்டு அரசு எடுத்துவரும்‌ நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பினை நல்க வேண்டுமென அனைத்து தரப்பினரும்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌. என தெரிவிக்கப்பட்டுள்ளது.