மாணவரை கடத்தி கொலை செய்து காட்டுப் பகுதியில் வீசிய கும்பல்: காதல் விவகாரம் காரணமா?!..போலீசார் தீவிர விசாரணை..!

மாணவரை கடத்தி கொலை செய்து காட்டுப் பகுதியில் வீசிய கும்பல்: காதல் விவகாரம் காரணமா?!..போலீசார் தீவிர விசாரணை..!



a-gang-kidnapped-a-college-student-and-threw-him-in-the

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வைரமுத்து (45). இவரது மகன் முத்துக்குமார் (19). இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில், முத்துக்குமார் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருடன் விஸ்வநத்தம் பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, அங்கு வந்த சிவகாசியைச் சேர்ந்த பாண்டித்துரை, மாரி, ஆறுமுகம், பெரியசாமி ஆகியோர் முத்துக்குமாரை சரமாரியாக தாக்கியதுடன் அவரை இழுத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த முத்துக்குமாரின் தந்தை  வைரமுத்து, சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில், ஆள் கடத்தல் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன கல்லூரி மாணவர் முத்துக்குமாரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் விஸ்வநத்தம் அருகேயுள்ள தெற்கு ஆனைக்கூட்டம் பகுதியில் இருந்து, பேர்நாயக்கன்பட்டி செல்லும் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் வாலிபர் பிணம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தகவலறிந்த காவல்துறையினர் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று பிணமாக கிடந்த வாலிபரின் உடலை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த விசாரணையில், சடலமாக கிடந்தது காணாமல் போன கல்லூரி மாணவர் முத்துக்குமார் என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, ஆள் கடத்தல் வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த காவல்துறையினர் கல்லூரி மாணவர் முத்துக்குமார் கொலைக்கான காரணம் காதல் விவகாரமா? அல்லது வேறு காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குறறவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.