குடிபோதையில் நடந்த தகராறு... கொடூரமாக இளைஞர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம்...!!
குடிபோதையில் நடந்த தகராறு... கொடூரமாக இளைஞர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம்...!!
கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள ஆர்ஜிபுதூரில் வேட்டைக்காரன் கோவில் உள்ளது. இந்தப் பகுதியில் அடர்ந்த முட்புதர் நிறைந்து காணப்படுவதால் பொதுமக்கள் தனியாக அங்கு செல்வதற்கு அஞ்சக்கூடிய இடமாகும்.
நேற்றிரவு இந்தப் பகுதியில் அமர்ந்து புவனேஷ் குமார், அவரின் நண்பர் பாலாஜி மற்றும் ஒரு சில நண்பர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர். அதே சமயம், அதே பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (22) மற்றும் அவரது நண்பர்களும் அந்த பகுதியில் வேறொரு இடத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
மது அருந்திக் கொண்டிருந்த பாலாஜி, புவனேஷ் குமார் மற்றும் நந்தகுமார் என நண்பர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் உண்டானது. பின்னர் வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. குடித்துவிட்டு போதையில் இருந்த இரண்டு குழுவினரும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டனர்.
இந்த சண்டையின் போது நந்தகுமார் மற்றும் அவரது நண்பர்கள் புவனேஷ் குமாரை அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினர். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த புவனேஷ் குமாரை உடனடியாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் புவனேஷ் குமார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் கல்லூரி மாணவர் என்று தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து நந்தகுமார் மற்றும் நண்பர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். தகவல் அறிந்த பீளமேடு காவல்துறையினர் உடனடியாக சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கோவை மாநகர காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.