மின்னல் தாக்கியதால் அடியோடு சாய்ந்த தென்னமரம்: இடையில் சிக்கிய தாத்தாவுக்கும் பேத்திக்கும் நேர்ந்த துயரம்..!

மின்னல் தாக்கியதால் அடியோடு சாய்ந்த தென்னமரம்: இடையில் சிக்கிய தாத்தாவுக்கும் பேத்திக்கும் நேர்ந்த துயரம்..!



a-coconut-tree-that-was-overturned-by-lightning

ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு,  திமிரி அருகேயுள்ள ஆயிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (72). இவரது மகன் ஏகாம்பரம். இவர்கள் இருவரும் விவசாயிகள். இவரது மகள் லாவண்யா (17), ஆற்காடு பகுதியில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துள்ளார். கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வி பெற ஆர்வத்துடன் இருந்ததாக கூறப்ப்டுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை வெங்கடேசன் மற்றும்  அவரது பேத்தி லாவண்யா ஆகிய இருவரும் தங்களது விவசாய நிலத்தில் வைக்கோல் போர் அமைத்துள்ளனர். அப்போது மழை வருவதற்கான அறிகுறி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இடியும் மின்னலும் ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக, அருகில் இருந்த தென்னை மரத்தில் மின்னல் தாக்கியுள்ளது.

இதன் காரணமாக வெங்கடேசன், அவரது பேத்தி லாவண்யா மீது தென்னை மரம் சாய்ந்துள்ளது. எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இருவரும் பலியானார்கள். இது குறித்து தகவல் அறிந்த திமிரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது சடலங்களையும்  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.