கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம்: பள்ளியின் மீது அவதூறு பரப்பிய வழக்கில் கைதான 3 பேர் பயங்கர விபத்தில் சிக்கினர்..!

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம்: பள்ளியின் மீது அவதூறு பரப்பிய வழக்கில் கைதான 3 பேர் பயங்கர விபத்தில் சிக்கினர்..!


3-people-arrested-in-the-case-of-defaming-the-school-me

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகேயுள்ள சிறுநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபு (32). இவர் கனியாமூர் பள்ளியில் நடந்த மாணவியின் மர்ம மரணம் குறித்து வாட்ஸ் அப் செயலில் அவதூறு பரப்பியதாக கைதாகி நிபந்தனை ஜாமீனில் வந்துள்ளார். இவரை போன்றே இவரது நண்பர்களான பா.கொத்தனூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (32) என்பவரும், ராமசந்திரன் (24) என்பவரும் அதே வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வந்துள்ளனர்.

இவர்கள் மூவரும் விருத்தாசலம் நீதிமன்றத்தில் தினந்தோறும் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று நீதிமன்றத்தில் கையெழுத்து போடுவதற்காக மோட்டார் சைக்கிளில் கிளம்பிய கோபு, வேப்பூர் கூட்ரோட்டில் நின்று கொண்டிருந்த தனது நண்பர்கள் இருவரையும் ஏற்றிக் கொண்டு விருத்தாசலம் நீதிமன்றத்துக்கு புறப்பட்டார்.

சேலம்-விருத்தாசலம் சாலையில் வேப்பூர் பகுதியை அடுத்துள்ள கண்டபங்குறிச்சி அருகே தே.புடையூர் கைகாட்டி அருகே சென்றபோது விருத்தாசலத்திலிருந்து வந்த கர்நாடக  மாநிலத்தை சேர்ந்த கார் ஒன்று கோபு ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டிய கோபு பலத்த காயமடைந்தார். அவருடன் சென்ற ராமசந்திரன், கிருஷ்ணமூர்த்திக்கு நெஞ்சு மற்றும் விலா பகுதிகளில் காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து, இவர்களுக்கு வேப்பூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைகாக கோபுவை முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையிலும், ராமச்சந்திரனை பெரம்பலூர் தனியார் மருத்துவமனையிலும், கிருஷ்ணமூர்த்தியை பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும் மேல் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர். இந்த விபத்து குறித்து வேப்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகினறனர்.