'என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை' - தேர்வு பயத்தில் விருதுநகர் மாணவர் விபரீதம்.!

'என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை' - தேர்வு பயத்தில் விருதுநகர் மாணவர் விபரீதம்.!



12th-student-suicide-for-exam-fear

தேர்வு பயத்தில் 'என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை' என்று கடிதம் எழுதி, மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த பேரதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சூலக்கரை பகுதியில் வசித்து வருபவர்கள் முருகேசன்-ஈஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், மூத்த மகன் கல்லூரியில் பயின்று வருகிறார். இளைய மகன் தினேஷ், ராம்கோ வித்யாலயா பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்த நிலையில், இன்று பொதுத்தேர்வு எழுத வேண்டிய மாணவன், தேர்வு பயத்தில் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இது குறித்து அறியாத அவரது பெற்றோர் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியூர் சென்ற நிலையில், தாத்தா வேலுசாமி மட்டும் இவருடன் வீட்டில் இருந்தார்.

அப்போது தாத்தா வெளியில் கிளம்பிய நேரம் பார்த்து, மனவிரக்தியில் இருந்த மாணவன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மேலும், "எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை" என்ற ஒரு தற்கொலை குறிப்பையும் எழுதி வைத்துள்ளார்.

Virudhunagar

பின் இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த சூலக்கரை காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில் தினேஷ் எழுதிய தற்கொலை குறிப்பை வைத்து, படிப்பில் பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாது என்ற ஒரு எண்ணம்தான் தற்கொலைக்கு காரணம் இன்று தெரியவந்துள்ளது.

மேலும், மாணவன் தினேஷ் தற்கொலை குறித்து ஓய்வு பெற்ற ஆசிரியர் கூறுகையில், "தற்போதைய காலகட்டத்தில் பெற்றோர் மற்றும் பள்ளியின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் இயந்திரங்களாக மட்டுமே மாணவர்கள் இயக்கப்படுகின்றனர். 

Virudhunagar

அத்துடன் கற்றலில் ஆர்வம் ஏற்படுவதை தவிர்த்து, கல்வி பயிலுவதை சுமையென கருதுவதால் மாணவர்களின் வாழ்க்கைக்கு அது கசப்பாகிவிடுகிறது. ஆனால், எதற்கும் தற்கொலை ஒரு தீர்வாகாது என்பதை நாம் மாணவ சமுதாயத்திற்கு உணர்த்த வேண்டும். 

இந்த தலைமுறையினருக்கு இதனை நாம் உணர்த்த தவறியதால் மட்டுமே, மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற விபரீத எண்ணத்தை எடுத்து வருகின்றனர்." என ஆதங்கத்துடன் தெரிவித்திருக்கிறார்.