3rd Test: இந்தியாவின் வெற்றியை தடுக்க வந்த வருண பகவான்! கனவு நிறைவேறுமா?

3rd Test: இந்தியாவின் வெற்றியை தடுக்க வந்த வருண பகவான்! கனவு நிறைவேறுமா?



Rain delayed last day of 3rd test

மெல்போர்னில் நடந்து வரும் 3 வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று மைதானத்தில் மழை பெய்வதால் ஆட்டம் தாமதமாக துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நடைபெற்று வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று தொடரை சமன் செய்துள்ளது. இந்தப் போட்டியில் கடைசி நாளான இன்று இந்திய அணி வெற்றி பெற 2 விக்கெட்டுகள் மட்டுமே தேவை. எனவே இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெறும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். 

3rd test

மூன்றாவது போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்களுக்கு எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக புஜாரா 106 ரன்கள் எடுத்தார். 

இதனையடுத்து முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் சார்பில் பும்ரா அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

3rd test

பின்னர் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. அதிகமான ரன்கள் எடுத்து இமாலய இலக்கை ஆஸ்திரேலியாவிற்கு நிர்ணயிக்கலாம் என்ற எண்ணம் தவிடுபொடியானது.

பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தனர். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 4ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 141 ரன்கள் எடுத்தால் ஆஸ்திரேலியா வெற்றி பெறலாம்.

3rd test

ஆஸி. அணியின் கம்மின்ஸ் 61 ரன்களுடனும், லியான் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். கடைசி நாள் ஆட்டமான இன்று மெல்பர்னில் மழை பெய்து வருவதால் இன்னும் ஆட்டம் துவங்கவில்லை. மழை தொடர்ந்து பெய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்தியாவின் வெற்றிக்கு 2 விக்கெட்டுகளே தேவை என்பதால் குறைவான ஓவர்கள் கிடைத்தாலே போதும் என அனைவரும் எதிர்ப்பார்த்து  வருகின்றனர்.