சூர்ய குமாரின் அதிரடியை எங்களால் கட்டுப்படுத்த முடியும்: இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்..!

சூர்ய குமாரின் அதிரடியை எங்களால் கட்டுப்படுத்த முடியும்: இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்..!


England all-rounder Ben Stokes can control Surya Kumar's action

எட்டாவது டி-20 உலக கோப்பை போட்டி தொடர் சூப்பர் 12 சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 12 சுற்றில் 2 குரூப்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

முதல் அரையிறுதியில் இன்று நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அடிலெய்டு மைதானத்தில் நாளை நடைபெறும் 2 வது அரைஇறுதி போட்டியில் இந்திய அணியை, இங்கிலாந்து அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டி குறித்து இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சர்வதேச டி-20 போட்டிகளில் சமீபகாலங்களில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி வருகிறார். அவர் அடிக்கும் சில ஷாட்கள் ஆச்சரியம் அளிக்கும் வகையில் பிரம்மாண்டமாக  உள்ளது. அவர் அதிரடியாக ஆடும் போது, அவரை எப்படி கட்டுப்படுத்துவது என்பது புரியாமல் பந்துவீச்சாளர்கள் விழிபிதுங்கி நிற்பதை பார்த்துள்ளேன்.

அவர் எப்படிபட்ட ஃபார்மில் இருந்தாலும் அவரது ஆக்ரோஷமான அதிரடி ஆட்டத்தை எங்கள் பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறோம். விராட் கோலியை பொறுத்தவரை எல்லா வடிவிலான போட்டிகளிலும் அவர் குவித்துள்ள ரன்களே அவரது திறமைக்கு சான்று. அவரை நாங்கள் ஒருபோதும் குறைத்து மதிப்பிடமாட்டோம். ரோஹித் சர்மா கடந்த சில ஆட்டங்களில் சரியாக ஆடவில்லை. இருப்பினும் அவர் டி-20 போட்டிகளை பொறுத்தவரை உலக தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்.

எங்கள் அணியும் இதுவரை சிறப்பான கிரிக்கெட்டை இந்த தொடரில் விளையாடவில்லை. இருந்த போதிலும் அரைஇறுதிக்குள் நுழைந்து விட்டோம். ஆஸ்திரேலிய மைதானங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை அறிந்துள்ளோம். அதனால் அரையிறுதி போட்டியை உற்சாகமாக எதிர்நோக்கி உள்ளோம்." இவ்வாறு பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.