அ.தி.மு.க-வில் நடக்கும் அனைத்து கலவரங்களுக்கும் பாரதிய ஜனதாவே காரணம்: நாஞ்சில் சம்பத் பகீர் குற்றச்சாட்டு

அ.தி.மு.க-வில் நடக்கும் அனைத்து கலவரங்களுக்கும் பாரதிய ஜனதாவே காரணம்: நாஞ்சில் சம்பத் பகீர் குற்றச்சாட்டு



the-bharatiya-janata-party-is-responsible-for-all-the-r

அ.தி.மு.க-வில் நடக்கும் அனைத்து கலவரங்களுக்கும் பாரதிய ஜனதாவின் சித்து விளையாட்டுகளே காரணம் என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதி தி.மு.க இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை பூந்தமல்லியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அமைச்சர் நாசர், தி.மு.க நிர்வாகி தமிழன் பிரசன்னா, நாஞ்சில் சம்பத் ஆகியோர் கலந்துகொண்டு தி.மு.க இளைஞரணி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள். இவர்களுடன் பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி, பூந்தமல்லி ஒன்றியக்குழு தலைவர் ஜெயக்குமார், இளைஞரணி நிர்வாகிகள் பிரபு கஜேந்திரன், ஜெரால்டு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பயிற்சி பாசறை நிகழ்ச்சி முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத் கூறியதாவது:-

அ.தி.மு.க-வில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜனநாயகத்தில் ஒரு அநீதியை அரங்கேற்றி இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வில் இடைச் செருகலாக வந்தவர்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கண்டு கொள்ளப்படவில்லை என்பதைவிட நீதிமன்ற தீர்ப்பின் மீது அத்துமீறலை நடத்தி இருக்கிறார்கள். இதற்கு பின்னால் பாரதிய ஜனதாவின் சித்து விளையாட்டு இருக்கிறது என்பதை இந்த நாடு புரிந்து கொண்டிருக்கிறது. மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்

இன்று மராட்டியத்தில் சிவசேனா கட்சிக்கு செய்வதை நாளை தமிழகத்தில் அண்ணா தி.மு.க-வுக்கும் பாரதிய ஜனதா கட்சியினர் செய்வார்கள். செல்வாக்கு உள்ள கட்சிகளை துண்டு துண்டாக உடைப்பதும், அவற்றை உருக்குலைப்பதும், அதற்குள் ஊடுருவுவதும் பாரதிய ஜனதாவின்  கொள்கை. அதற்கு அ.தி.மு.க-வும் பலியாகி இருக்கிறது என்று நாஞ்சில் சம்பத் கூறினார்.