ஓபிஎஸ் கையை விட்டுப் போன வங்கி கணக்குகள்... பொருளாளர் இவர்தான் கைகாட்டிய எடப்பாடி..!
ஓபிஎஸ் கையை விட்டுப் போன வங்கி கணக்குகள்... பொருளாளர் இவர்தான் கைகாட்டிய எடப்பாடி..!
சென்னை, அதிமுக வங்கி கணக்குகள் எல்லாம் ஓ பன்னீர்செல்வம் கையைவிட்டு போய்விட்டது. இதனால் அவர் தற்போது கட்சி நிதியை எதற்கும் பயன்படுத்த முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளார்.
கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடந்த அதிமுகவின் பொதுக்குழுவில் அதிமுக கட்சியின் பொருளாளர், அடிப்படை உறுப்பினர், ஒருங்கிணைப்பாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார். அவரை நீக்குவதற்கான தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.
இந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட 16 தீர்மானங்கள், அனைத்து முடிவுகள், நியமனங்களுக்கு எதிராக ஏற்கனவே ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளார். இதுபற்றிய விசாரணைகள் இன்னும் தேர்தல் ஆணையத்தில் தொடங்கவில்லை. விரைவில் தேர்தல் ஆணையம் இதுகுறித்து முடிவுகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கட்சியில் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். தற்பொழுது கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப்பொதுச் செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதிமுகவின் தலைமை கழக செயலாளராக வேலுமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்வு என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவித்துள்றது. இப்படி கட்சியின் முக்கிய பொறுப்புகள் எல்லாம் புதிய நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதில் பொருளாளர் பொறுப்பு என்பது முக்கியமானது. ஏற்கனவே அதிமுகவில் நிலவும் மோதல் காரணமாக கட்சியில் சம்பளம் பெறும் நிர்வாகிகளுக்கு வருமானம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாளராக ஓபிஎஸ் இருந்த கடைசி மாதத்தில் சம்பளம் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான், தற்போது பொருளாளர் பொறுப்பில் இருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். ஆனால் ஓ பன்னீர்செல்வம் அவர்தான் பொருளாளர் என்று கூறி அதிமுக வங்கி கணக்குகள் இருக்கும் பேங்குகளுக்கு அவர் சார்பாக கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில், நான்தான் அதிமுகவின் பொருளாளர், என்னுடைய அனுமதி இல்லாமல் பணத்தை எடுக்க யாருக்கும் அனுமதி தர கூடாது. மீறி தந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறி இருந்தார். ஆனால் வங்கிகளோ.. நீங்கள் கொடுத்த கடிதத்தில், நீங்கள்தான பொருளாளர் என்பதற்கான உரிய ஆதாரங்கள், போதிய ஆவணங்கள் இல்லை. அதனால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளது.
அதே சமயம் எடப்பாடி பழனிசாமி தரப்பும் பொதுக்குழு கடித்ததோடு திண்டுக்கல் சீனிவாசன் புதிய பொருளாளர் என்று கூறி கடிதம் அனுப்பியது. இதை வங்கிகள் தரப்பு ஏற்றுக்கொண்டன. எனவே தற்போது வங்கி கணக்குகள் திண்டுக்கல் சீனிவாசன் கைக்கு சென்றுள்ளது. இதனால் அதிமுக வங்கி கணக்குகள் எல்லாம் ஓ பன்னீர்செல்வம் கையைவிட்டு போய்விட்டது. இதனால் அவர் தற்போது கட்சி நிதியை எதற்கும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளார்.