பா.ஜ.க-வில் இணைகிறாரா சசிகலா?...! தலைமை குழுவே முடிவெடுக்கும்: அண்ணாமலை சூசகம்..!

பா.ஜ.க-வில் இணைகிறாரா சசிகலா?...! தலைமை குழுவே முடிவெடுக்கும்: அண்ணாமலை சூசகம்..!


sasikala-joining-with-tamainadu-bjp-is-not-our-decision

பா.ஜ.கவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்று மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

முன்னதாக புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், “அ.தி.மு.க-வில் சசிகலாவை சேர்த்தால் அந்த கட்சி இன்னும் வலுவானதாக உருவெடுக்கும். அதேவேளையில் சசிகலா பா.ஜ.க-வுக்கு வந்தால் வரவேற்கத் தயாராக இருக்கிறோம். அவரது வருகை பாஜகவினருக்கு உற்சாகத்தை அளிக்கும்.

சசிகலாவை அ.தி.மு.க-வில் சேர்த்துக் கொள்ளாவிட்டால், அவரை பா.ஜ.க-வில் இணைப்பதற்கான பணிகளை நாங்கள் முன்னெடுப்போம் என்று கூறினார். அந்த சந்திப்பின் போது  சசிகலாவின் பெயரை குறிப்பிடாத நயினார் நாகேந்திரன், சின்னம்மா என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த  அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பியபோது, “பா.ஜ.க-வுக்கு சசிகலா வந்தால் வரவேற்போம் என நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்தாக நான் நினைக்கிறேன். கட்சியின் கருத்தல்ல என்று கூறினார்.

மேலும், இது போன்ற விஷயங்களில் தனி ஒரு மனிதன் முடிவெடுக்க முடியாது.. அப்படி ஒன்று நடப்பதாக இருந்தால், அது தொடர்பாக டெல்லியில் உள்ள தலைமைக் குழுவின் ஆலோசனைப்படியே முடிவெடுக்கப்படும்  என்று கூறினார். சசிகலா இதுவரை பா.ஜ.க-வில் இணைவது  குறித்து எப்போதும் பேசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து வெளியே வந்த அவர் அன்று முதல்  இன்று வரை அ.தி.மு.க-வை மீட்பது குறித்து மட்டுமே பேசி வருகிறார்.