இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி.! அடுத்த நான்கு மாதங்களுக்குள் நிரந்தர பொதுச்செயலாளர்.!
இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி.! அடுத்த நான்கு மாதங்களுக்குள் நிரந்தர பொதுச்செயலாளர்.!
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இரட்டைத் தலைமைகளாக கட்சியை வழிநடத்தி வந்தனர். ஆனால் தற்பொது அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சமீப காலமாக நடந்துவருகிறது.
ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று அவரும் அவரது ஆதரவாளர்களும், இரட்டை தலைமையே தொடர வேண்டும் என ஓபிஎஸ்ஸும் அவரது ஆதரவாளர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற, அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்யும் தீர்மானம் உள்ளிட்ட 16 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. மேலும், இடைக்கால பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான விவாதமும், அடுத்த பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் பற்றிய விவாதமும் இன்றைய பொதுக்குழுவில் நடைபெறவுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியைத் தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அதுவரை இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை அவர் எடுத்துக்கொள்வார் எனவும் கூறப்படுகிறது. நிரந்தர பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தலை நான்கு மாதங்களுக்குள் நடத்தவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.