எடப்பாடி அடுத்த 15 நாட்களில் எடுக்கப்போகும் இறுதி முடிவு என்ன?அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!!!



aiadmk-mlas-support-tvk-government-eps-dilemma

தமிழக சட்டமன்றத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக அதிமுகவைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்தது மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சித் தலைமையின் நிலைப்பாட்டை மீறிய இந்த நடவடிக்கைக்கு எதிராக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது அரசியல் வட்டாரங்களில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.

சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த உறுப்பினர்களும் இந்த அணியில் இடம்பெற்றிருப்பது, அதிமுக உள்கட்டமைப்பில் புதிய சிக்கலை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கூட்டம் கூட்டமாக அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக-விற்கு ஆதரவு.? ஆனால் விஜய்க்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி! ஆதரவா..? ஆபத்தா..? ஊழலலற்ற அரசியலில் அதிரடி திருப்பம்..!!!

தகுதி நீக்கமா? மன்னிப்பா?

அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணையான தாவல் தடைச் சட்டத்தின்படி, கட்சியின் கொறடா உத்தரவை மீறி வாக்களிக்கும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் கட்சித் தலைமையிடம் உள்ளது.

அதே நேரத்தில், உத்தரவை மீறிய உறுப்பினர்களை 15 நாட்களுக்குள் “மன்னித்து ஏற்றுக்கொள்ளும்” வாய்ப்பும் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதனால், இபிஎஸ் கடுமையான நடவடிக்கைக்கு செல்வாரா அல்லது கட்சியின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு சமரச அணுகுமுறையை தேர்வு செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2017-ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ-க்கள் எதிராக வாக்களித்தபோதும், அப்போது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

சட்ட ரீதியான சிக்கல்கள் என்ன?

இந்த விவகாரத்தில் சட்ட நுணுக்கங்களும் முக்கிய பங்காற்றுகின்றன. குறிப்பாக, அதிமுக கொறடா முறையாக நியமிக்கப்பட்டாரா, அந்த விவரங்கள் சபாநாயகர் அலுவலகத்தில் சரியான காலக்கெடுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

மேலும், “கொறடா உத்தரவு தங்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை” என்ற வாதத்தை இந்த 25 உறுப்பினர்களும் முன்வைத்தால், அது சட்டப்போராட்டத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்கள் கூறுகின்றன.

கொறடா உத்தரவு முறைப்படி வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே தகுதி நீக்க நடவடிக்கை சட்டரீதியாக வலுப்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிமுகவின் அடுத்த நகர்வு என்ன?

இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில், அதிமுகவின் உள்நிலை பிரச்சனை சட்டமன்ற அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் நிலைக்கு சென்றுள்ளது.

அதிருப்தியில் உள்ள உறுப்பினர்களை மீண்டும் ஒருங்கிணைத்து கட்சியை கட்டுப்பாட்டில் வைத்திருக்க இபிஎஸ் முயற்சிப்பாரா அல்லது தகுதி நீக்க நடவடிக்கையின் மூலம் கடுமையான அரசியல் சிக்னல் கொடுப்பாரா என்பது அடுத்த சில நாட்களில் தெளிவாகும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: அழியப்போகும் அதிமுக கட்சி...? எடப்பாடியை ஓரங்கட்டும் மாஜிக்கள்! சிவி சண்முகம் செய்யும் தில்லாங்கடி வேலையால்.... தலையை ஆட்டும் அமைச்சர்கள்!