அதிமுகவிலிருந்து மூன்று முக்கிய எம்.எல்.ஏ.க்கள் விலகல்..? 35 எம்எல்ஏக்களுடன் முக்கிய கட்சியில் இணைவு...செம ஷாக்கில் எடப்பாடி!!!
தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவின் முக்கிய தலைவர்கள் தலைமையில் 35 சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஆட்சியமைப்புக்கான கணக்கில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக மேலும் வலுப்பெற்றுள்ளது. கடந்த சில மணி நேரங்களாக அரசியல் வட்டாரங்களில் இதுவே முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
35 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு?
தகவலின்படி, அதிமுக முன்னணி நிர்வாகிகளான சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் தலைமையில் 35 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக-க்கு ஆதரவு அளிக்கத் தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அதிமுகவில் மீண்டும் பெரிய அளவிலான உள்கட்சிப் பிளவு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு 1987-லும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017-லும் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தைப் போன்ற சூழல் தற்போது மீண்டும் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் உள்ள 47 அதிமுக எம்.எல்.ஏ.க்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேற்பட்டோர் ஆதரவு அளித்தால், கட்சித் தாவல் தடைச் சட்டம் பொருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தவெக பலம் அதிகரிப்பு
ஏற்கெனவே காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க தேவையான 118 என்ற எண்ணிக்கையை எட்டியிருந்த தமிழக வெற்றிக் கழகம், தற்போது மேலும் 35 உறுப்பினர்களின் ஆதரவைப் பெறும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சட்டப்பேரவையில் விஜய்யின் பலம் கணிசமாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளுநரை சந்திக்க திட்டம்
இந்த ஆதரவு தொடர்பான கடிதங்களை ஆளுநரிடம் சமர்ப்பித்து, வலுவான அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் விஜய் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து ஆலோசனைகள் மற்றும் சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன.
அதேசமயம், இந்த தகவல்கள் குறித்து அதிமுக தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. இருப்பினும், அரசியல் களத்தில் வேகமாக மாறி வரும் சூழ்நிலை காரணமாக அடுத்தடுத்த நகர்வுகள் மீது அதிக கவனம் திரும்பியுள்ளது.