ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக மாறிய கணக்கு! 25 இப்போ 17 தான்.... ஆனால் 25 என்பது 35 கூட ஆகலாம்! அதிமுக-வில் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வால் சி.வி.சண்முகம் ஆவேச பேச்சு...!!!
அதிமுகவில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த உள்கட்சி மோதல் தற்போது வெளிப்படையான அரசியல் நகர்வுகளாக மாறியுள்ளது. வேலுமணி - சி.வி.சண்முகம் அணியில் இருந்த மூன்று எம்எல்ஏக்கள் திடீரென எடப்பாடி பழனிசாமி தலைமையை ஆதரித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே நேரத்தில் மேலும் சில எம்எல்ஏக்கள் தவெகவுக்கு நகர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுகுமார், ஹரிபாஸ்கர், மோகன் ஆகிய மூன்று எம்எல்ஏக்கள் தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், இபிஎஸ் அணியின் பலம் 25 எம்எல்ஏக்களாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
வேலுமணி அணிக்கு சரிவு?
முன்னதாக 25 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகக் கூறப்பட்ட வேலுமணி - சி.வி.சண்முகம் அணியின் எண்ணிக்கை தற்போது 17 ஆக குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அந்த அணியைச் சேர்ந்த சிலர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் நோக்கியும் நகர்ந்திருப்பது அதிமுக வட்டாரத்தில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி மற்றும் தலைமை அரசியல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த அணிமாற்றங்கள் அதிமுகவின் உள்கட்டமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
செய்தியாளர்கள் கேள்வியால் டென்ஷனான சி.வி.சண்முகம்
இதற்கிடையில், எம்எல்ஏக்கள் அணிமாறுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சற்றே ஆவேசமாகப் பேசியது கவனத்தை ஈர்த்தது.
“25 எம்எல்ஏக்கள் கொண்ட உங்கள் அணி தற்போது 17 ஆகக் குறைந்துவிட்டதே?” என்ற கேள்விக்கு, “25 என்பது 35 ஆக மாற எவ்வளவு நேரம் ஆகப் போகிறது?” என அவர் பதிலளித்தார். இந்த ஒற்றை வரி பதில், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்கான சிக்னலா என்ற விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
“Will talk later” எனச் சுருக்கமான பதில்
தவெகவில் இணையப் போகிறீர்களா என்ற கேள்விக்கு நேரடி பதில் அளிக்க மறுத்த சி.வி.சண்முகம், “தேவையில்லாத கேள்விகள் வேண்டாம்” என கூறினார். அதன்பின் “Will talk later” என்று மட்டும் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
அதே நேரத்தில், விரைவில் தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்படும் என்றும், எல்லா கேள்விகளுக்கும் சரியான நேரத்தில் பதில் தரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் நெருங்கும் சூழலில் அதிமுக உள்கட்சி அரசியல் மேலும் சூடுபிடித்துள்ளது.