பதிலில் முதிர்ச்சியை காட்டிய நயன்தாரா; காதல் குறித்த பேச்சுகளுக்கு விளக்கம்
டூயட் பாடி நடித்துவந்த நயன்தாரா, அறம் படத்தின் மூலம் தனது அனுபவத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இந்நிலையில் அவருடைய பேச்சிலும் அனுபவம் வெளிப்பட்டுள்ளது.

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். இருவரும் ஒன்றாக ஊர் சுற்றும் ஹாட் போட்டோக்களை அவ்வப்போது வெளியிட்டு இளசுகளின் பிபியை எகிற வைத்து வருகின்றனர்.

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி நயன்தாராவையும் விக்னேஷ் சிவனையும் கலாய்க்காமல் நகர்வதே இல்லை தொகுப்பாளர்கள். ரசிகர்களும் இருவரின் காதல் குறித்து அவ்வப்போது பேசி வருகின்றனர்.
ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் கருத்தும் சொல்லாமல் ஊர் ஊராக சென்று காதலை வளர்த்து வருகிறார்கள் இருவரும். இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்கின்றனர்.

நயன்தாரா இப்போது இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா, விஸ்வாசம், கொலையுதிர் காலம், தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கோலமாவு கோகிலா படம் திரைக்கு வர தயாராக உள்ளது.

படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றை விக்னேஷ் சிவனை வைத்து வெளியிட்டுள்ளனர். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற நயன்தாரா, காதல் பற்றிய பேச்சுக்களுக்கு விளக்கம் அளித்தார்.

அவர் கூறும்போது, "இந்த உலகம் உங்களை பார்க்கிற விதம் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும். சிலருக்கு இன்று உங்களை பிடிக்கும். நாளையே அவர்களுக்கு பிடிக்காமலும் போகலாம். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சிந்தித்துக்கொண்டு இருந்தால் நாம் ஒரு வாழ்க்கையை வாழ முடியாது" இவ்வாறு நயன்தாரா கூறிய பதிலில் தன் முதிர்ச்சியை காட்டியுள்ளார்.