காதலனை கொலைசெய்து உடலை சமைத்து தொழிலாளர்களுக்கு விருந்தாக்கிய பெண்; ஆறு மாதங்களுக்குப் பிறகு சிக்கியது எப்படி!

ஐக்கிய அரபு அமீரகத்தில் மொராக்கோ நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தன் காதலரை கொலை செய்து உடலை கறியாக்கி அதில் செய்த மஹபூ வகை உணவை தொழிலாளர்களுக்கு பரிமாறியுள்ளார். ஆறு மாதங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரபு செய்தித்தாள்கள் வெளியாகியுள்ள தகவலின்படி, குற்றம்சாட்டப்பட்ட அந்தப் பெண் கொலை செய்யப்பட்ட வாலிபருடன் கடந்த 7 வருடங்களாக வலுக்கட்டாயமாக உறவில் இருந்துள்ளார். ஆறு மாதங்களுக்கு முன் அந்த வாலிபர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவதாக முடிவு செய்துள்ளார். இதனை கேள்விப்பட்ட அந்த குற்றவாளி பெண் மிகவும் ஆத்திரம் அடைந்து, கோபத்தில் அந்த வாலிபரை கொலை செய்துள்ளார்.
உடலை எப்படி மறைப்பது என்பதை யோசித்த அந்த பெண் அந்த வாலிபரின் உடலை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி பிரியாணி போன்ற உணவு வகையை தயாரித்துள்ளார். பின்னர் அந்த உணவை அருகில் கட்டிட வேலை பார்த்து வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பரிமாறியுள்ளார். அவர்களும் அதில் இருப்பது மனித மாமிசம் என்பது தெரியாமலே சாப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நடைபெற்று ஆறு மாதங்களுக்குப் பிறகு கொலை செய்யப்பட்ட அந்த வாலிபரின் சகோதரர், அண்ணனை தேடி அந்த பெண் வசித்து வரும் கட்டிடத்திற்கு வந்துள்ளார். அப்போது அந்தப் பெண்ணின் வீட்டில் மனித பற்கள் கிடப்பதை அவர் கண்டுள்ளார் இதனால் சந்தேகம் அடைந்த அவர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
பின்னர் அந்த பல்லை கொண்டு டிஎன்ஏ பரிசோதனை செய்ததில் கொலை செய்யப்பட்டது அந்தப் பெண்ணுடன் ஏழு வருடங்களாக பழகி வந்த வாலிபர் என்பது உறுதியானது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அந்த பெண் தன் காதலரை கொலைசெய்து உணவு சமைத்து தொழிலாளர்களுக்கு பரிமாறியதை ஒப்புக்கொண்டார் இதன் மூலம் அந்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.