பீங்கான் கப்பில் தேநீர் குடிப்பது பாதுகாப்பானதா? ஷாக் தகவல் சொல்லும் மருத்துவர்கள்.!
செராமிக் கோப்பைகளில் தேநீர் பருகுவது வழக்கமான பழக்கமாக இருந்தாலும், தரமற்ற பாத்திரங்கள் உடல்நல ஆபத்தை ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
உடலுக்கு பாதுகாப்பா?
Ceramic Tea Cup: இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் தேநீருக்கு தனி இடம் உண்டு. பலருக்கு காலை டீ இல்லாமல் தொடங்கவே முடியாது. வீடுகள் மட்டுமல்லாமல் அலுவலகங்கள், கடைகள் என எங்கும் தேநீர் பரிமாறப் பயன்படுவது பீங்கான் கோப்பைகளே. பிளாஸ்டிக் அல்லது காகித கோப்பைகளுடன் ஒப்பிடும்போது, பீங்கான் கோப்பைகள் பாதுகாப்பானவை என்ற பொதுவான நம்பிக்கை உள்ளது. ஆனால், எல்லா பீங்கான் கோப்பைகளும் உடலுக்கு பாதுகாப்பானவையா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
தரச்சான்று இருந்தால் நல்லது:
பீங்கான் கோப்பைகள் களிமண், சீனா கிளே, ஃபெல்ட்ஸ்பார் மற்றும் சிலிக்கா போன்ற கனிமப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. இவை வடிவமைக்கப்பட்டு, அதிக வெப்பநிலையில் சூளையில் சுடப்பட்ட பிறகு மெருகூட்டல் செய்யப்படுகிறது. இந்த மெருகூட்டல்தான் கோப்பைக்கு பளபளப்பையும், நீர்ப்புகாத தன்மையையும் அளிக்கிறது. உயர்தரமான, உணவுத் தரச்சான்று பெற்ற பீங்கான் பாத்திரங்கள் பொதுவாக பாதுகாப்பானவை எனக் கருதப்படுகின்றன.
அபாயம் குறைவு:
தரமான சீனப் பீங்கான் கோப்பைகளில் தேநீர் அல்லது தண்ணீர் பருகுவது பெரும்பாலும் எந்த உடல்நல ஆபத்தையும் ஏற்படுத்தாது. காரணம், இவை மிக உயர்ந்த வெப்பநிலையில் தயாரிக்கப்படுவதால், ரசாயனங்கள் நிலைபெற்று பானங்களில் கலக்கும் அபாயம் குறைகிறது. அன்றாட பயன்பாட்டில் இவை நேரடியாக தீங்கு விளைவிப்பதில்லை என்றும் மருத்துவர்கள் விளக்குகின்றனர்.

மலிவு விலையில் வாங்கி விஷத்தை குடிக்காதீங்க:
ஆனால், குறைந்த தரத்தில் தயாரிக்கப்பட்ட உள்ளூர் பீங்கான் பாத்திரங்களில் சிக்கல் ஏற்படலாம். இவ்வகை கோப்பைகளின் மெருகூட்டலில் ஈயம், காட்மியம் போன்ற கன உலோகங்கள் கலந்திருக்க வாய்ப்புள்ளது. இவற்றில் மிகவும் சூடான தேநீர் அல்லது காபி ஊற்றும்போது, அந்த நச்சுப் பொருட்கள் மெதுவாக பானத்தில் கரைந்து உடலுக்குள் செல்லக்கூடும். இது நீண்ட காலத்தில் சிறுநீரக பாதிப்பு, வயிற்று மற்றும் செரிமான கோளாறுகள், நரம்பு மண்டல பிரச்சினைகள் போன்றவற்றை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
நீண்டகால பாதிப்புகள்:
இந்த ஆபத்துகள் உடனடியாக வெளிப்படாமல், காலப்போக்கில் தலைவலி, சோர்வு, கவனக் குறைவு போன்ற அறிகுறிகளாக தெரியக்கூடும். குழந்தைகளில் கற்றல் திறன் மற்றும் கவனத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம். எனவே, தேநீர் அல்லது காபி குடிக்கும்போது உணவுத் தரச்சான்று பெற்ற உயர்தர பீங்கான் அல்லது கண்ணாடி கோப்பைகளை பயன்படுத்துவது சிறந்தது.