நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம்... விமான கழிவறையில் புகை பிடித்த பெண்; விபரீதம்..!!

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம்... விமான கழிவறையில் புகை பிடித்த பெண்; விபரீதம்..!!



young woman smoking a cigarette inside an IndiGo flight has caused a shock

இன்டிகோ விமானத்திற்குள் இளம் பெண் ஒருவர் சிகரெட் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பயணிகள் சிலர் விமானப் பயணத்தின் போது விதிமீறலில் ஈடுபட்டு அனைவரையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் சம்பங்கள் சமீப காலமாகவே அதிகம் நடந்து வருகிறது. தற்போது அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இண்டிகோ விமானம் ஒன்று கடந்த மார்ச் 5 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு பயணித்தது. அந்த விமானத்தில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது பெண் பிரியங்கா சென்றுள்ளார். 

கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்டு பெங்களூரு நோக்கி சென்றுள்ளது. விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது, பிரியங்கா என்ற பயணி விமானத்தில் இருந்த கழிவறைக்கு சென்றுள்ளார்.

கழிவறையில் நின்று சிகரெட் புகைத்துள்ளார். பின்னர், சிகரெட்டை சரியாக அணைக்காமல் தரையில் போட்டு விட்டு மீண்டும் தனது இருக்கைக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் சிகரெட்டின் நெடி  வந்ததை தொடர்ந்து விமானப் பணிப்பெண் கழிவறைக்குள் சென்று பார்த்துள்ளார்.

அப்போது சிகரெட் துண்டு அணையாமல் இருந்ததை பார்த்த பணிப்பெண், உடனே அதை அனைத்துள்ளார். பிரியங்கா விதிகளை மீறி விமானத்திற்குள் புகைப்பிடித்தை கண்டுபிடித்த பணிப்பெண் குழுவுக்கு தகவல் தர பெங்களூரு விமான நிலையத்திற்கு இந்த தகவல் சொல்லப்பட்டது.

பெங்களூருவில் விமானம் தரையிறங்கியவுடன், அங்கு தயார் நிலையில் இருந்த காவல்துறையினர் பிரியங்காவை கைது செய்தனர். சக பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக அவர் நடந்து கொண்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.