குஜராத்தில் இருந்து கொடைக்கானல் வரை: சுற்றுலா பயணிகளின் திரில்லர் சஸ்பென்ஸ்..!

குஜராத்தில் இருந்து கொடைக்கானல் வரை: சுற்றுலா பயணிகளின் திரில்லர் சஸ்பென்ஸ்..!



tourist-thriller-suspense-from-gujarat-to-kodaikanal

குஜராத் மாநிலம், மிசானா மாவட்டத்தில் உள்ள உன்ஜனா பகுதியை சேர்ந்த  42 பேர் ஆம்னி பஸ் ஒன்றில் தென்னிந்தியாவை பார்க்கும் ஆசையில் சுற்றுலா பயணமாக கிளம்பினர். முதற்கட்டமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை பார்வையிட்ட அவர்கள், நேற்று முன்தினம்  தமிழகம் வந்தடைந்தனர்.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைகளின் ராணி ஊட்டிக்கு சென்ற அவர்கள், அங்குள்ள பல்வேறு இடங்களை பார்த்து ரசித்தனர். அதன் பிறகு பழனிக்கு வந்த சுற்றுலா பயணிகள், முருகன் கோவிலுக்கு சென்று அவரை தரிசனம் செய்தனர். இதன் பின்னர்  பழனிக்கு அருகேயுள்ள மலைகளின் இளவரசியான கொடைக்கானல் பகுதிக்கு  வந்தனர். அங்குள்ள இயற்கை எழில் கொஞ்சும் பல்வேறு இடங்களை பார்வையிட்டனர்.

இதனையடுத்து, மதுரைக்கு சென்று மீனாட்சி அம்மனை தரிசிப்பது அவர்களது திட்டமாக இருந்தது. திட்டமிட்டபடி கொடைக்கானலில் இருந்து மதுரைக்கு செல்ல அவர்களது பேருந்து புறப்பட்டது. கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் வந்து கொண்டிருந்த பேருந்து, டம் டம் பாறை என்ற இடத்தில் வந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக ஓடியது.

ஒரு கட்டத்தில், வலப்பக்கம் இருந்த தடுப்புச்சுவரை உடைத்து பள்ளத்தில் பாய்ந்த பேருந்து, அதிர்ஷ்டவசமாக அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. இதனால் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் அலற தொடங்கினர். இந்த சம்பவம் குறித்து அந்த வழியாக சென்ற மற்ற சுற்றுலா பயணிகள், தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்த காவல்துறையினரும், பெரியகுளம் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்து பயணிகளை மீட்கும் பணியில் காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் தொடங்கினர். விபத்துக்குள்ளான பேருந்தில் பயணம் செய்த 42 பயணிகள் மற்றும் அந்த பேருந்தின் ஓட்டுனரை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் ஒருவருக்கு கூட காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.